Sunday, December 20, 2009

அடங்கிய சுனாமி... அடங்காத பீதி - 4




கனத்த இதயங்களுடன் எங்களில் மிகச் சிலர் கோவிலுக்குள் சென்றோம். ஆள் அரவமே இல்லாமல் இருந்தது. மிக விரைவாக அங்கிருந்து வெளியேறும்படி காவல்துறை ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தது. இந்த பதட்டத்தில் என் அப்பா என்னிடம் 50 ரூபாயை கொடுத்து வேகமாக மெழுகுவர்த்தி வாங்கி வா. அதை ஏற்றிவைத்து கும்பிட்டுவிட்டு சென்றுவிடுவோம் என்றார். நானும் கோவிலிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளை நோக்கி ஓடினேன். பிறகுதான் தெரிந்தது அந்த கடைகளும் அடித்து செல்லப்பட்டுவிட்டது. இதிலிருந்து நாங்கள் அனைவரும் ஏதோ மனம் பேதலித்த நிலையில் தான் இருந்துள்ளோம் என்பது புரிந்தது.

இந்த ஆழிப் பேரலைகள் வேளாங்கண்ணி புதிய கோவில் வாசல் வரை வந்துள்ளது. ஆனால் கோவிலின் உள்புறம் சேதமில்லை. கோவிலின் வலது புறம் வழக்கமாக நாங்கள் தங்கும் Little Flower Lodge-ப் பகுதி பெருத்த சேதம் அடைந்திருந்தது. நல்லவேளை இந்த முறை நாங்கள் அங்கு தங்கவில்லை. தங்கியிருந்தால் எங்களில் சிலருக்கு அல்லது அனைவருக்குமோ உயிர் உத்திரவாதம் இருந்திருக்காது.

எங்கள் வீட்டு உரிமையாளர் ஏதோ வேளாங்கண்ணி கடலுக்குள் மூழ்கி கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டு, "சார் வாங்க வேகமா கடலுக்கு எதிர் திசையில போயிடுவோம்" என்கிறார். எங்கள் ஒட்டுனரில் ஒருவர் பழனிக்கு மாலை அணிந்திருந்தார். அவர் வேறு அடிக்கடி... "ஐயா நான் வேற மாலை போட்டிருக்கேன்யா. வாங்கய்யா சீக்கிரம் வீட்டுக்குப் போயிருவோம்" எனக் கூறிக் கொண்டிருந்தார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று. அவன் வழக்கம் போல பழக்க தோஷத்தில் தப்பிப்பதற்கு ஏதாவது காரணம் சொல்ல வேண்டும் என்று இதை சொல்லி இருக்கிறான்.


எங்க அப்பா ரொம்ப சின்சியர் ஆனவரு. அவரு என்னிடம், "தம்பி நம்ம வேற உயர்மட்ட பரிந்துரையில இந்த ரூம் வாங்கினோம். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து போச்சு. தங்குமிட வசதி செஞ்சுகொடுக்குற அலுவலகத்துல போயி இந்த ரூம் சாவியக் குடுத்துட்டு... நம்ம எல்லாரும் பத்திரமா இங்கிருந்து கிளம்புரம்னு" பயணஞ் சொல்லிட்டு வரச்சொல்லிட்டாரு. நானும் என் தம்பியும் அந்த மோசமான தண்ணியில பெரும்பாலும் மேட்டுப் பகுதியாப் பார்த்து போயி சாவிய குடுத்துட்டு சொல்லிட்டு வந்துட்டோம். பல வாகனங்களின் புகைக் குழாயில் தண்ணீர் புகுந்ததால் மேலும் செல்ல இயலாமல் பலர் தவித்தனர். எங்கள் ஓட்டுனர் மேட்டுப் பகுதிகள் வழியாக சென்று இப் பிரச்சனைகளை தவிர்த்தான். அதே நேரம், எனக்காகவும் என் தம்பிக்காகவும் காத்திராமல் என் அப்பா கூறியதைக் கூட கேட்காமல்.... நீர் குறைவாக இருந்த பகுதியில் வண்டியை நிறுத்தினான்.


நானும், எனது தம்பியும் அந்த நீரில் நடந்து வந்த பொது சந்தித்த அனுபவங்கள் இன்னும் மிகக் கொடியது. ஒருவர் ஒரு தரை அளவு பாலத்தின் சுவற்றில் உட்கார்ந்து இருப்பது போல இறந்து விறைத்து கை கால்களை மேல் நோக்கி நீட்டியவாறு கால் சட்டையுடன் இருந்தார். அவரது வேஷ்டியை காணவில்லை. நீரின் பல பகுதிகளில் சில மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருந்தன. நீருக்கடியில் சில கம்பு, கம்பி போன்ற பொருட்களும் மூழ்கி எங்கள் கால்களில் தட்டுப்பட்டன. சில சாக்கடை குழிகளில் மாட்டியிருந்த பிணங்களின் கைகளும், கால்களும் எங்கள் கால்களில் உரசியதில் அதிர்ந்து போனோம்.


ஒரு வழியாக அங்கு போக்குவரத்திற்கு சிரமப்பட்டவர்களில் ஒரு சிலரை எங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து வேளாங்கண்ணி நாகபட்டினம் சாலையில் விட்டுச் சென்று நாங்களும் உயிர் பிழைத்தோம். வேளாங்கன்னியை விட்டு வெளியேறியவுடன், அன்றைய காலை எங்களுக்கு தங்கும் வசதிக்காக முயற்சி செய்த என் நண்பர்களையும் தொடர்புகொண்டு அவர்களும் உயிர்தப்பி விட்டார்கள் என்றறிந்து கொண்டேன். நல்ல வேலையாக எனது உள்ளூர் நண்பனின் வீடு ஒரு பெரிய மணல் குன்றின் பின்புறமாக அமைந்ததால், அதிக பாதிப்பின்றி தப்பிவிட்டனர். அன்று முதல் இன்றுவரை, ஏனோ ஏன்னால் வேளாங்கண்ணிக்கு செல்ல முடியவில்லை.

இன்று வரை இந்த சுனாமியால் பாதிப்படைந்து, மனநிலை பாதிக்கப்பட்டு, குடும்பம் பிரிந்து வாடும் நம் உறவுகளை எண்ணி கண்ணீருடன் இந்த பகிர்வை நிறைவு செய்கிறேன்.

இந்த கட்டுரையின் அனைத்துப் பகுதிகளும், உலக நாடுகளில் சுனாமியால் தம் உறவுகளை இறந்த குடும்பங்களின் சார்பாக, இறந்த அந்த சொந்தங்களுக்கு சமர்ப்பணம்.

*** முற்றும் ***



அடங்கிய சுனாமி... அடங்காத பீதி...- 3

பகுதி - 1
பகுதி - 2


எங்க மாடியிலிருந்து ஒரு மூலையில் பார்த்தால் கடலின் சிறிதளவு தெரியும். அலைகள் மிகப் பெரியதாய் தோன்றுவதை காண முடிந்தது. எங்கள் அறையில் இருந்த பெரும்பாலோர் பயப்படத் தொடங்கினர். மேலே உள்ள மொட்டை மாடிக்கு செல்ல படி இல்லை. அதனால், அந்த அறையில் இருந்த ஒரு இரும்பு கட்டிலை வராந்தாவில் போட்டு அதன் மேல் அங்கு இருந்த மேசையை போட்டு இரண்டு ஆண்களை முதலில் ஏறச் செய்தோம். பிறகு குழந்தைகளையும் மகளிரையும் நாங்கள் இருவர் கீழிருந்து ஒவ்வொருவராக தூக்கி மேலே ஏற்றி விட்டோம். எனது அப்பாயி(அப்பாவின் அம்மா), கொஞ்சம் வயதானவர். ஆனால் நல்ல தெம்பாக இருக்கிறார். வாங்க அப்பாயி நீங்களும் மேல ஏறுங்க என்றால். அட போங்கப்பா, ரூமுக்குள்ள நம்ம கொண்டுவந்த பொருள் எல்லாம் இருக்குது. நான் பாத்துக்கிறேன். நீங்க போங்க என்றார். அட, "கடல் தண்ணி ஊருக்குள்ள வருது... நம்மளே செத்தாலும் செத்துடுவோம். இப்ப போயி பொருள பாதுகாக்கிறேன்னு..." வாங்கன்னா வாங்களே என்றோம். அதற்கு அவர் நீங்க பத்திரமா இருங்கப்பா... நான் இனிமே இருந்து என்ன பண்ணப் போறேன். நான் செத்தா சாகிறேன் என்கிறார். ஒரு வழியாக அவரையும் தூக்கி மேல போட்டுட்டோம்.

அங்க போயி பார்த்தாத்தான் தெரியுது அந்த ஊர்ல எங்க எங்க மொட்டை மாடி இருக்கோ அங்கெல்லாம் மக்கள் வெள்ளம். பக்கத்திலிருந்த கட்டிடத்தை பார்த்தால் அந்த மொட்டை மாடி தளமே தாங்காதோ! அதனால் அவர்களுக்கு பாதிப்பு வருமோ என்று பயம் கொள்ளும் வகையில் கூட்டம். எனது அப்பா அனைவரிடமும், இது தான் நமக்கு அதிகபட்ச பாதுகாப்பு. இத்தளம் வரை தண்ணீர் வராது என நம்புவோம் என்றார். (இந்த நிகழ்வின் பெயர் சுனாமி என்பது நாங்கள் அந்த ஊரை கடக்கும் வரை தெரியாது.) இப்போது எனக்கும், என் தம்பிகளுக்கும், என் அம்மாவிற்கும் மற்றும் என் அப்பாயிக்கும் ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்து, இதை மிக பத்திரமாக உங்கள் ஆடைகளில் முடிந்து வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை நாம் இருக்கும் தளம் வரை நீர் வந்துவிட்டால்.... அப்பாவை காப்பாத்துறேன்.... அம்மாவை காப்பாத்துறேன்... தம்பிய காப்பாத்துறேன்-னு முயற்சி செய்யாமல் நீர் செல்லும் திசையில் நீந்தி தப்பித்து, இப் பணத்தை வைத்துக் கொண்டு ஊர் போய் சேருங்கள் என்றார்.


இதைப் பார்த்த என் உறவினர்களும் அவ்வாறே தங்கள் குழந்தைகளுக்கு செய்து கொண்டிருந்தனர். நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் தன் 2 வயது குழந்தைக்கும், 4 வயது குழந்தைக்கும் இது போல் 500 ரூபாய் பணத்தை தன் குழந்தைகளின் ஆடையில் ஊக்கு வைத்து குத்திவிட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாங்கள் பலர் சிரித்துவிட்டோம். அங்கிருந்த பல பெண்கள் ஆலயத்தை நோக்கி ஜெபிக்க தொடங்கிவிட்டார்கள். ஆண்கள் நாங்கள் கடலில் எழுந்த அலைகளின் உயரங்களை பார்த்து இப்போது அலையின் வேகம் குறைகிறது... இல்லை இல்லை கூடுகிறது என்று அவரவர்களுக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டிருந்தோம். சில மணி நேரம் கழித்து ஒவ்வொரு கட்டிடத்திலிருந்தும் மக்கள் வெளியேறத் தொடங்கினர். அலையின் வேகமும் தணிந்திருந்தது.

அனைவரையும் மேலே ஏற்றும்போது அவசரத்தில் எங்களுக்கு சிரமமாகத் தெரியவில்லை. கீழே இறக்கும் பொது மிகவும் சிரமமாகப் போய்விட்டது. கடைசியில் அந்த மேசையும், கட்டிலும் தங்களின் கால்களை இழந்தன. ஊருக்குள் இருந்த நீரின் அளவும் சில இடங்களில் வெகுவாகக் குறைந்திருந்தது. நாங்கள் உதவிய அந்த குடும்பங்கள் எங்களை கட்டியணைத்து தங்களின் கண்ணீர் மூலம் நன்றி தெரிவித்து சென்றனர். எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் வேனில் ஏற்றிக்கொண்டு, எங்களில் சிலர் என் அப்பா தலைமையில் வந்தது வந்தாச்சு அப்படியே வேகமா கோயிலுக்குள்ள போயி சாமியக் கும்பிட்டிட்டு போயிடுவோம் என்று வேகமாக நடந்தபடியே கடற்கரை பக்கம் இருக்கும் பெரிய கோவிலுக்கு சென்றோம். வேன் எங்களுக்கு முன்பாக சென்று கோவிலின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்தது.


நடந்து செல்லும் வழியில் நாங்கள் பார்த்த காட்சிகள் எங்கள் மனங்களை மறத்துப் போகச் செய்துவிட்டது. எங்கு பார்த்தாலும் பிணக் குவியல்கள். நீரில் மூழ்கிக் கிடந்த பிணங்களை சிலர் தூக்கி கோவிலின் வாசற்படிகளில் கிடத்திக்கொண்டிருந்தனர். சந்து பொந்துகளில் எல்லாம் பிணங்கள் தலை குப்புற நீரின் வேகத்தால் சொருகப்பட்டிருந்தது. பல உள்ளூர் பெண்களும் ஆண்களும் தங்களின் துணைகளை தேடிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்களது துணைகள் பிணங்களாக. இவர்களோ நடமாடும் பிணங்களாக. பெரும்பாலான பிணங்கள் தலை குப்புற கிடந்ததால் இவர்களால் எளிதில் அடையாளம் காண முடியவில்லை. ஒவ்வொரு பிணமாக சென்று முகத்தை திருப்பி பார்த்து அடையாளம் காண முயன்றனர். இதே போல தேடிவரும் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு கண்ணீருடன் "அடியே மொட்டையா போக உன் புருஷன் அந்த கோடி மரத்துக்குப் பக்கத்திலே கிடக்காருடி", "அண்ணே! உங்க பொண்டாட்டி, பஸ் ஸ்டாண்டு காம்பவுண்டுக்குப் பக்கத்திலே சாக்கடை குழில சொருகி கிடக்காக".... இன்னும் பல அடையாளங்களுடன் சொல்லிக்கொண்டிருந்தனர்.

பிணங்களைத் தூக்கி செல்ல ஆள் கிடைக்காமல் ஒரு சைக்கிளில் இரண்டு பிணங்களை உட்கார வைத்து உருட்டிக்கொண்டு சென்றது ஒரு குடும்பம். ச்சே! என்ன கொடுமையான சம்பவம் இது. முதலில் எனக்கு கண்கள் கலங்கின. பிறகு மறத்துப்போய்விட்டேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகப் போடப்பட்டிருந்த பெரிய தென்னங்கீற்றுக் கொட்டகையில் ஆங்காங்கே பிணங்கள். அழுவதற்கு எங்களுக்கு திராணியும் இல்லை அவர்கள் வளர்த்த பிராணியும் இல்லை.





----- பீதி தொடரும்....



அடங்கிய சுனாமி... அடங்காத பீதி... - 2

பகுதி - 1

நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் இடது புறத்தில் காலியிடங்கள் இருந்திருக்கிறது. அதில் கடல் நீர் புகுந்து ஒரு ஆறு போல் காணப்பட்டது. சில ஆட்டுக்குட்டிகளும், கோழிகளும் அதில் அடித்து வரப்பட்டன. நான் எனது அப்பாவிடம், இன்று பௌர்ணமி அதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, பெரும் அலைகள் தோன்றி நீர் இந்த கால்வாய் வழியாக சென்று கொண்டிருக்கிறது என்றேன். என் அப்பாவோ, மிக அதிகமாக நீர் ஊருக்குள் சென்றுகொண்டிருக்கிறது. இதை வழக்கம் போல சன் டிவியில் flash news-ல் போட்டு விடுவார்கள். நம் உறவினர்கள் அச்சப்படக்கூடும் என்று எமது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் ஒருவருக்கு அலைபேசியில் அழைத்து பயப்பட வேண்டாம் என சொல்லி விடுவோம் என்றார்.

எங்களது உரையாடலை அருகிலிருந்து கவனித்த ஒருவர், சார் இது பௌர்ணமி அலை இல்லை. இதுக்குப் பேரு வேற என்னமோ சொல்றாங்க. சென்னையில இருந்து கன்னியாகுமரி வரை எல்லா கடற்கரைப் பகுதிகள்லையும் கடல் நீர் பெரிய பெரிய அலைகளின் மூலம் உள்ளே புகுந்திருச்சாம்னு சொன்னார். இவை அனைத்தும் ஓரிரு நிமிடங்களில் நடந்தவை. அச் சமயம் ஒருவர் கைக்குழந்தையுடன் அந்த கால்வாய் நீரில் போராடி நீர் செல்லும் திசையிலேயே நீந்தி கொண்டிருந்தார். அதே கணம் ஒரு கூட்டம் எங்கள் மாடிக்கு அலறிய வண்ணம் ஓடி வந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே கூக்குரல். யாருக்கும் எதுவும் புரியவில்லை. அங்கு வந்த ஒரு சிலர் நடந்ததை அவர்கள் அறிந்த வரை கூறியவுடன் தான் விபரீதம் புரிந்தது.

தப்பி வந்து சேர்ந்தவர்களில் எனக்கு நினைவாக ஒரு ஆந்திர குடும்பம், ஒரு மலையாள குடும்பம் மற்றும் ஒரு மீனவ குடும்பம். நான் ஹைதராபாத்-ல் சிறிது காலம் வேலை செய்த அனுபவத்தில் எனக்கு ஓரளவு தெலுகு தெரியும். அதேபோல, அச்சமயம் திருவனந்தபுரத்தில் வேலை செய்துகொண்டிருந்ததால் கொஞ்சம் மலையாளமும் தெரியும். அதனால், அந்த குடும்பத்தினரை ஆசுவாசப்படுத்தி எங்கள் அறையில் அமர செய்திருந்தோம். நாங்கள் கொண்டு சென்றிருந்த இட்லிகளை அவர்களுக்கு அளித்தோம். அவர்கள் சாப்பிட மறுத்தனர். வலுக்கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தோம். அந்த மலையாளி குடும்பத்தில் ஒரு தாய், தந்தை மற்றும் மகன் இருந்தனர். இவ்விரு குடும்பத்தினரும் வேளாங்கண்ணி வேற்று மாநிலத்தில் இருந்ததாலோ என்னவோ பயம் அவர்களை மிக அதிகமாகவே ஆட்டிப்படைத்தது. நான் அவர்களது மொழியில் பேசியதால் அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்ததாக கூறினர்.

எங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக இருந்ததால், எங்களுக்கு இதன் விபரீதம் புரியவில்லை. அந்த மலையாளி ஒரு இதய நோயாளியாகவும் இருந்தததால் அவருக்கு மிக சிரத்தையோடு ஆறுதல் கூற வேண்டியதாயிற்று. மேலும் அவரது மாமியாரும், மாமனாரும் மிக வயதானவர்கள். அவர்கள் நாங்கள் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். அவர்களிடம் அலைபேசியும் இல்லை. கடைவீதிக்கு வந்த இவர்களுக்கு என்ன ஆனதோ என்றோ அவர்கள் பதறியிருக்க கூடும். அந்த வயதானவர்கள் இவர்களைத் தேடி எங்கும் வெளியில் சென்று விடக்கூடாது என்று இவர்களுக்கு பயம். ஆந்திர குடும்பமும் ஒரு சேர அங்கு பத்திரமாக இருந்ததால் ஓரளவு பயம் குறைந்து இருந்தனர். அவ்வப்போது என்னிடம் சில விளக்கங்கள் கேட்டு தெளிவடைந்து கொண்டிருந்தனர்.


தப்பி வந்த அந்த மீனவக் குடும்பத்தில் ஒரு மாமியார், மருமகள், ஒரு மகன்(10) மற்றும் ஒரு மகள்(7) இருந்தனர். அந்த மாமியார் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தார். அவர்களின் உடைகள் முழுவதும் ஈரம். அந்த குழந்தைகள் முகம் பயத்தில் இறுக்கமாகவே இருந்தது. அந்த மாமியார், வேளாங்கண்ணி மாதாவை "ஆத்தா, நீ இங்க இருக்காய்னு தானே நாங்க உசிர் வாழுறோம். நீ எங்களை காப்பத்துவாய்னு தானே கடல்ல பொழப்பு நடத்துறோம். நீ எங்களை இப்படி கை விட்டுட்டியே. உனக்கு அப்படி என்ன கோவமோ எங்க மேல. இது உனக்கே நல்ல இருக்கா? நீயெல்லாம் ஒரு தெய்வமா?? உன்ன கும்பிட இவ்வளவு சனம் வருதே. அவங்க எல்லாம் பாவம் இல்லையா??? நீ இங்க எங்க கூட இருந்தும் இப்புடி நடக்க விட்டுட்டியே"-னு திட்டி கொண்டிருந்தார். மருமகளை நோக்கி, "ஏண்டி, மு***டைகளா, நீங்க பன்ற அட்டூழியத்துக்கெல்லாந்தாண்டி இப்புடி நடக்குது. நீங்கல்லாம் அடங்கி ஒழுங்கா இருந்திருந்தா இப்படியெல்லாம் நடக்குமா? அவஅவ சீவி முடிச்சு, சிங்காரிச்சுகிட்டு போறவன் வர்றவனை எல்லாம் மயக்குனா.... இப்புடித்தாண்டி நடக்கும். வேளாங்கண்ணி ஆத்தாளும் பொறுத்து பொறுத்து பாத்தா... அவ்வளவு தாண்டி அவ பொறுமையோட எல்லா முடிஞ்சிடுச்சி. அதான் இப்புடி பொங்கிட்டா" கத்த ஆரம்பித்துவிட்டார்.









அந்த இரண்டு சிறு பிள்ளைகளும் எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தனர். அந்த சிறவன் தனது ஆயாவிடம், "ஆயா, என் கூட டோனி விளையாண்டுகிட்டு இருந்தான் ஆயா. திடீர்னு ஒரு பெரிய அலை வந்து எங்களை தூக்கி மேல கொண்டுபோயிட்டு அப்புடியே கீழ போட்டுருச்சு. நான் அங்க நின்னுகிட்டு இருந்த வேனு மேல போயி விழுந்தேன். வேனும் அப்பறம் சாஞ்சிடுச்சு... அங்கின நின்ன ஒருத்தரு என்னையும் சேர்த்து பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்து அங்க இருந்த ஒடஞ்ச வீட்டு சுவத்துக்கிட்ட விட்டுட்டு போனாரு. பாவம் ஆயா டோனி அவன தண்ணி இழுத்துக்கிட்டு போயிடுச்சு" என்றான். நல்ல வேலையாக அந்த சிறுமை அவளது தாய் தந்தையுடன் மீன் சந்தையில் இருந்ததால் காப்பாற்றப் பட்டுவிட்டாள். நாங்கள் அவர்களை அழைத்து அவர்களுக்கும் இட்லிகளை கொடுத்து சாப்பிட செய்தோம்.

அனைவரையும் அறையில் பத்திரமாக இருக்கும் படி கூறிவிட்டு, நான் எனது தம்பி, தந்தை மற்றும் எனது மாமா நால்வரும் கிளம்பி கீழே கடை வீதிக்கு சென்று என்ன நடந்தது என்று பார்த்துவிட்டு, காவல்துறையிடம் உதவி கோரலாம் என சென்றோம். இக்கட்டிடத்தின் மாடிப்படிகள் பின்புறமாக இறங்கும் வகையில் அமைந்திருந்தது. படியின் கீழ் இறங்கி கொஞ்ச தூரம் சென்றவுடன் எங்கள் இதயங்கள் சிறிது கணம் நின்றது போல் ஆகிவிட்டது. மூன்று நான்கு கைக்குழந்தைகள் அங்கு கிடந்த சிறிதளவு நீரில் இறந்தபடி மிதந்து கொண்டிருந்தது. எங்களது சுற்றுச் சுவரின் வாயில் கடல் அலை சென்ற திசைக்கு பக்க வாட்டில் இருந்ததாலும் சிறிது மேட்டுபகுதியாக இருந்ததாலும் அதிக வெள்ளம் உள்ளே வரவில்லை.

வாயிலின் வெளியே முக்கிய கடைவீதி. அங்கு வந்து பார்த்த பொது உடல் முழுவதும் இதுவரை நான் உணராத சிலிர்ப்படைந்து ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியது. முழங்கால் அளவுக்கு நீர். அது கலங்கிய சாக்கடை நீரைப்போல இருந்தது. நீரில் ஆங்காங்கே பயன்படுத்தப்படாத CoCo Cola, PEPSI, Bisleri, பனங்கிழங்கு, பாசி மாலைகள், விளையாட்டுப் பொருட்கள், பொறி, பூக்கள் இன்னும் ஏராளமான பொருட்கள் மிதந்துகொண்டிருந்தன. உடனே, மிக மிக அருகிலிருந்த(சுமார் 20 மீட்டர்) காவல்துறை அலுவலகம் சென்று ஒரு பெண் ஆய்வாளர் இருந்தார் அவரிடம் முறையிட்டு, நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். தீயணைப்பு நிலையத்தினரை வரவைக்கலாமே என்றோம். அவரோ சலிப்பாக "போங்க சார், கலக்டர்கிட்ட கூட சொல்லியாச்சு. இது இங்க மட்டும் இல்ல. நாகபட்டினத்துல இங்க விட ரொம்ப பாதிப்பாம். கலக்டர் அங்க போய்ட்டாரு" னு சொல்லிகிட்டு இருக்கும்போதே கடல் பக்கமா இருந்து ஒடுங்க பெரிய அலை வருதுன்னு ஒரு கூட்டம் ஓடிவர ஆரம்பிக்க.... நாங்களும் அந்த தண்ணிக்குள்ள ஓடி வேகமா வந்து எங்க மாடி ஏறிட்டோம்.

----- பீதி தொடரும்....



அடங்கிய சுனாமி... அடங்காத பீதி...- 1

(உண்மை சம்பவம். இதை கதை போல் சொன்னால் அதன் வலி தெரியாது என்பதால்... திரைக்கதை போல் எழுத வேண்டிய கட்டாயம். பொறுத்தருள்க)

சுனாமி வந்து ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னும் நம் மக்களிடையே அந்த அச்சம் விலகவில்லை. இதுவரை பலர் சுனாமியைப் பற்றி தாம் அறிந்த செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கக் கூடும். நான் சுனாமியில் இருந்து தப்பிய என் நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பெரும்பாலும் வருடத்திற்கு ஒருமுறை என் குடும்பத்தார்களும் மற்றும் பிற மத நண்பர்களும் வேளாங்கண்ணிக்கு செல்வதுண்டு. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி இரவு நான் என் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டு நண்பர்களுடன் எங்களது Mahindra Pick-Up வேனில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டோம். வழக்கமாக எதோ ஒரு வகையில் தங்குமிடத்திற்கு முன் பதிவு செய்வது வழக்கம். அந்த முறை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட சமயமாதலால் எங்களால் முன் பதிவு செய்ய இயலவில்லை.

காலை 5.30 மணியளவில் வேளாங்கன்னியை அடைந்துவிட்டோம். எனது நண்பரின் சகோதரர் ஒருவர் அங்குள்ள தேவாலய உணவு விடுதியில் பணி புரிகிறார். அவர் வேளாங்கண்ணி பழைய கோவிலுக்கு செல்லும் வழியில் உறங்கி கொண்டிருப்பதாக அறிந்து அங்கு சென்று தங்களுக்கு தங்க விடுதி வேண்டும். யாரவது உனக்குத் தெரிந்த அருட்தந்தையர்கள் மூலம் ஏற்பாடு செய்ய முடியுமா என்றோம். அவன் 8 மணியளவில் வந்து முயற்சி செய்கிறேன். ஆனால் இந்நாட்களில் கிடைப்பது அரிது என்றான்.

இதற்கிடையில் என்னுடன் கல்லூரி பயின்ற என் நண்பன் வில்சன் அதே ஊரைச் சார்ந்தவன். அவனை தொலைபேசியில் அழைத்து உதவி கூறியவுடன், உடனே நேரடியாக வந்து அவனுக்குத் தெரிந்த வழிகளில் முயன்று தோற்றான். வேறு வழியின்றி நானும் எனது தம்பியும் அங்குள்ள தாங்கும் விடுதிகளுக்கு பொறுப்பான அருட்தந்தை ஒருவரை சந்தித்து, எங்களுக்குத் தெரிந்த உயர்மட்ட பரிந்துரையின் பெயரில் வேளாங்கண்ணி பேருந்து நிறுத்தத்திற்கும் கடற்கரைக்கும் இடையில் புதியதாக கட்டப்பட்ட ஆலயத்திற்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் தாங்கும் வசதி பெற்றோம். நாங்கள் மொத்தம் 17 பேர் சென்றிருந்தோம்.

அனால், மொத்தம் 10 பேர் மட்டும் என்று போய் சொல்லி (உண்மைய சொன்னா ஏன்யா ஊரையே கூட்டி வந்துட்டியான்னு கடுப்பாக மாட்டாங்க? ) அந்த வசதியைப் பெற வேண்டியதாயிற்று. பகல் வேலை மட்டுமே அங்கு தங்கப்போவதால் அது யாருக்கும் சிரமாக இருக்காது. இருப்பினும், தங்குவதற்கு பெரிய அறையே ஒதுக்கப்பட்டிருந்தது. நமக்குத் தேவை குளிக்க, சமைத்து அமர்ந்து சாப்பிட ஒரு இடம். அது ஒரு பழைய பள்ளிக்கூடம் என்பதால் அங்கு பெரிய கால்பந்து மைதானமும், கூடைப்பந்து மைதானமும் இருந்தது. எங்கள் வாகனத்தை கால்பந்து மைதானத்தின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அனைவரும் அறைக்குச் சென்றோம்.

ஒவ்வொருவராக குளித்து விட்டு கொண்டுவந்திருந்த இட்லிகளை சாப்பிடுமாறு எனது தந்தை கூறினார். எங்களது வாகன ஓட்டிகள் இருவரும் எனது தந்தையிடம் ஐயா, நாங்க போயி கடல்ல குளிச்சுட்டு வர்றோம். அப்புறம் வந்து சாப்பிட்டுக்கிறோம் என்றார்கள். அதற்கு என் தந்தை, டேய், காலங்காத்தால கடல் ஓரமா விஷ பாம்புகள் கிடைக்கும்னு சும்மா சொல்லி, நாம எல்லாம் அப்புறமாக போயி ரொம்ப நேரம் குளிக்கலாம். இரவு முழுவதும் கண் விழித்து ஓட்டியதால் இப்போ போயி தூங்குங்க. அதிசயமா அவங்க ஒத்துக்கிட்டாங்க. :-)

இது எல்லாம் சுமார் 7:30 மணிக்குள் நடந்தது. நான், எனது அப்பா, அம்மா, தம்பிகள், மாமா, எங்கள் வீட்டின் உரிமையாளர் மற்றும் இரண்டு அத்தைகள் மீன் மற்றும் விறகு வாங்குவதற்காக மீன் சந்தைக்கு வந்தோம். மீன் வாங்கிய பிறகு அதை சுத்தம் செய்ய நேரம் ஆனபடியால் எங்களில் சிலர் விறகு மற்றும் சில பொருட்களை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றோம். சிறிது நேரத்தில் நான் குளித்துவிட்டு சாப்பிடுவதற்காக அமரும்போது எங்கள் ஓட்டுனர் ஒருவர் குளித்துவிட்டு துண்டை காயப்போடுவதற்காக அறைக்கு வெளியில் வந்தார். நாங்கள் தங்கி இருந்தது முதல் தளம். அதற்கு மேல் மொட்டை மாடி தான்.

அந்த வளாக சுவரை சுற்றி தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிகளும், கடைகளும் இருந்தன. எங்கள் அறை வாசலுக்கு எதிரே விளையாட்டு இடம் அதற்கடுத்து தனியார் விடுதிகளின் பின் பகுதிகள் சுற்று சுவராய். அதற்கும் கடலுக்கும் இடையில் சில வீடுகளும் கடைகளும். துண்டு காயப்போடச் சென்ற ஓட்டுனர் என்னை அழைத்து, அண்ணே! இங்க பாருங்க கடல் பக்கத்துல எவ்வளவு காக்கைகள் பறக்குத்துன்னு சொல்ல, நான் சாப்பாட்டில் கைவைக்கும் முன் ஓடிச்சென்று பார்த்தேன்.

எண்ணிலடங்கா காகங்கள் பறந்துகொண்டிருந்தன. கடற்கரையில கருவாடு காயப்போட்டிருப்பாங்க... அதனால இப்படி சுத்துதுன்னு நினைக்கிறேன் என்று சொல்வதற்கும் மீன் சுத்தப்படுத்தி வாங்கிக்கொண்டு என் அப்பாவுடன் அனைவரும் முதல் தளம் சேர்வதற்கும் சரியாக இருந்தது.

நான் எனது அத்தை மகளிடம், இங்க பாரு உங்க அண்ணனுக்கு நீ கோழி அடிச்சு போட்டு பாசத்த காட்ட வேண்டாம்.... இதுல (காகம்) அஞ்சு ஆறை புடிச்சு வறுத்துக் குடுத்தீன்னா அவன் உன் மேல ரொம்ப பாசமா இருப்பான்னு சொல்லி கிண்டல் பண்ணி கொண்டிருந்தேன். அப்படியே, எம் அறையின் முன் இருந்த தனியார் விடுதிகளின் பின் புறமிருந்து சுமார் ஐந்து அடி உயரத்தில் உள்ள ஜன்னல்கள் வழியாகவும், சில விடுதிகளின் கொல்லைப்புற கதவுகளின் இடுக்குகள் வழியாகவும் மிக மிக கேவலமான துர்நாற்றத்துடன் கூடிய நீர் விளையாட்டு மைதானங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. உடனே எங்கள் ஓட்டுனர் ஒருவரை அழைத்து... நம் வண்டியும் நாறிப்போகும் உடனே அதை எடுத்து கூடைபந்து விளையாட்டு மைதானத்தின் மேல் நிறுத்து என்றோம். (அதன் தளம் சற்று உயரமாக இருந்தது). அதிசயமாக, அவசரமாக மின்னல் வேகத்தில் அவனும் செயல்பட்டான்.

----- பீதி தொடரும்....



Thursday, December 17, 2009

மரணம் இணைக்கும் உறவுகள்

மனிதர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் மட்டுமல்லர். எப்போதும் உணர்வு வயப்பட்டவர்களும் கூட. மனித வாழ்க்கையில், சொந்தங்களும் நாம் அவற்றின் மீது கொண்டுள்ள பந்தங்களும் இன்றியமையாதது என்றே தோன்றுகிறது. வாழ்வின் பல சூழ்நிலைகளில் நாம் எதோ ஒரு வகையில் உணர்ச்சி வசப்பட்டு நம் உறவுக்காரர்களின் மேல் கோபங்கொண்டு அவர்களை வெறுத்து ஒதுக்குவதுண்டு. சில காலம் கழித்து இயல்பாகவே நம் பகையை மறப்பதுண்டு.

கோபங்களை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியும் சில சமயங்களில் கைகலப்பு செய்தும் நாம் பகையை பிரசவித்துக்கொள்வோம். கிராமங்களில் இன்றும் பங்காளிகள் சண்டையும், கொண்டான் கொடுத்தான் பகையும் அவ்வப்போது நிகழ்வது இயல்பே. சில குடும்பங்கள் தங்கள் பகையை, பெரிதுபடுத்திகாட்டாமல் எதிரியுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொள்வார்கள். யாரேனும் இது குறித்துக் கேட்டால் எங்களுக்குள் சின்ன மனஸ்தாபம் அதனால் பேசிக்கொள்வதில்லை என்பர்.

பங்காளிகள் சண்டை பெரும்பாலும் சொத்து தகராறினால் ஏற்படுவதுண்டு. ஐந்து வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பங்காளி எனும் கூற்றை இது போன்ற சொத்து விவகாரங்களில் நிரூபித்துவிடுவார்கள். பிரச்சணையின் சாராம்சம் மற்றும் அதை அவர்கள் கையாண்டவிதன்களைப் பொறுத்து மீண்டும் அவர்கள் இணையும் காலம் அமையும். பல சமயங்களில் இவர்களுக்குள் அடித்துக்கொண்டாலும், வேறு எவரோ ஒருவர் தன பங்காளியை சீண்டி அடிக்க முயலுபோது பெரும்பாலும் தன் பங்காளியை விட்டுக்கொடுக்காமல் எதிரியை நேரிடையாகவே "என்னடா, அவனை அடிச்சா கேட்க யாரும் இல்லையின்னு நினைச்சியா?" என்று கேட்டு மிரட்டுவர்.

கொண்டான் கொடுத்தான் என்பவர்கள் பெண் கொடுத்தோ அல்லது பெண் எடுத்தோ உறவை உருவாக்கி கொண்டவர்கள். இவர்களுக்குள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல் ஏற்பட்டு பகையாகி விடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு ஊர்களில் வசிப்பதாலோ என்னோவோ கையாலோ அல்லது ஆயுதம் கொண்டோ தாக்கி கொள்வதில்லை. விவகாரப் பேச்சு வார்த்தைகள் முற்றி பகைமை பாராட்டுவார்கள். இது போன்ற பகைகள் காலப்போக்கில் அந்தந்த வீட்டுப் பெண்களாலேயே சரி செய்யப்பட்டுவிடும் அல்லது அந்த வீட்டுப் பிள்ளைகள் நட்பாகி இணைந்துவிடுவார்கள்.

இதுபோன்ற பகைகளை சில நேரங்களில் காலம் தீர்த்துவைத்தாலும், பல நேரங்களில் காலன்(எமன்) தீர்த்து வைத்துவிடுவான். ஆம், மரணம் விட்டுப்போன உறவுகளை சேர்த்து வைத்துவிடும். என்னதான் பகையாக இருந்தாலும், அவரவர்களின் இரத்தம் பாசம் கலந்தபடியே ஓடிக்கொண்டிருக்கும். இதனால் தான் அவர்கள் என் இரத்த சொந்தங்கள் என்று கூறுவதன் அர்த்தம் புலப்படும்.

இவ்வாறான, இரத்த சொந்தத்தில் எவருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது ஒருவரின் உயிருக்கு பங்கம் என்றாலோ, பகையாக இருப்பினும் பாசம் விட்டுக்கொடுக்காது. பகை உருவாகும்போது நாம் நிதானமாக ஒரு கட்டுப்பாட்டுக்குள் நமது எதிர்ப்பையோ வருத்தத்தையோ வெளிப்படுத்தியிருந்தால், பகை மறந்து உறவு சேரும் காலத்தில் மனங்கள் ரணங்கள் இன்றி எளிதாக சேரக்கூடும். ரணங்கள் அதிகமிருப்பின் எக்காலத்திலும் உறவுகள் சேர பிற மனிதர்களின் முயற்சி தேவைப்பட்டுவிடும். "என்னையா பெருசா பகை. என்ன இருந்தாலும் அவன் உன் பங்காளி. அல்லது கொண்டான் கொடுத்தானுக்குள்ள இதெல்லாம் சகஜம். போகும்போது என்னத்தையா கொண்டு போகப்போறோம்?" என்று கூறியோ "அங்காளி பங்காளினா இதெல்லாம் இருக்கத்தான்யா செய்யும்" என்று கூறியோ பல மனித மனங்கள் நம் மனங்களோடு சமரசத்தை சாத்தியமாக்க முயலும்.

மரணத்தின் வலிகள் உணர்ந்த நமக்கு இதுபோன்ற தருணங்களில் அது தன் வலிமையையும் உணர்த்திவிடும். அரசியலில் மட்டுமல்ல, நமது வாழ்விலும் உறவும் பகையும் நிரந்தரமல்ல என்பதை இந்த மரணங்கள் நிரூபித்துவிடும். உணர்வுகளுடன் வாழப்பழகினால் உறவுகள் என்றும் சாத்தியமே.


Sunday, December 13, 2009

சிங்கை பதிவர்களின் மெக்ரிட்சி மலைக்காட்டு உலா!

திடீரென திட்டமிட்டாலும், மிகச்சிறப்பாக அமைந்த இந்த மலைக்காட்டு உலா மிக நல்ல அனுபவமாக அமைந்தது. மொத்தம் ஆறு சிங்கைபதிவர்கள் கலந்துகொண்டார்கள். ஜோசெப் பால்ராஜ், முகவை ராம், ஜெகதீசன், வெற்றிக்கதிரவன், அன்புத்தம்பி டொன்லீ மற்றும் ரோஸ்விக் ஆகிய நான். என்னையும், வெற்றிக்கதிரவனையும் சிங்கை பதிவுலகத்தலைமை ஜோசப் தனது மகிழ்வுந்தில் ஏற்றிச்சென்று எங்கள் பயண சிரமங்களை வெகுவாகக் குறைத்துவிட்டார். செல்லும் வழியில் சில நொறுக்குத்தீனிகளையும் சில மெதுபான வகைகளையும் வாங்கிக்கொண்டு சென்றோம். அனைவரும் குறித்த நேரத்தில் மெக்ரிட்சி நீர்த்தேக்கப் பகுதியில் சந்தித்து எங்களது மலைக்காட்டு உலாவைத் தொடங்கினோம்.










மக்களே, மொத்த 11.5 கி.மீ. தூர மலைகாட்டு பயணம் இது... சுற்றிலும் உயர்ந்து வளர்ந்த மரங்களின் அடர்த்தியான காடுகள். அதன் ஊடே வளைந்து நெளிந்த பாதை. நடந்து போறதுக்கே அவ்வளவு அருமையாக இருந்தது. நிறைய ஏற்ற இறக்கங்கள்... அந்த மலை பெண்டுகள்ள எங்க பெண்டு கழன்டுருச்சுப்பா... வெளில சிறிதளவு வெயில் கொடுமை இருந்தாலும் காட்டுக்குள்ள அது சுறுசுறுப்பா எங்களை மாதிரி வந்து சேரல. வழியில ஆங்கங்கே அமர்ந்து கொண்டுசென்ற மெது பானங்கங்களையும், நொறுக்குத்தீனிகளையும் வயித்துக்குள்ள அமுக்கிகிட்டு இன்னும் சுறுசுறுப்பா நடந்தோம்.








டொன்லீயை கட்டளைத்தளபதியாக செயல்படுமாறு எங்கள் தலைமை பணித்தது. ஆனால் அவர் எங்களை பின் புறமிருந்து இயக்கியது கடைசி மூன்று கி.மீ வரை மர்மமாகவே இருந்தது. :-) இவ்வளவு அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏகப்பட்ட படிகளை மரத்தாலும் இரும்பாலும் மிகச்சிறப்பாக அமைத்திருந்தார்கள். பல இடங்களில் குறைந்தபட்சம் 50 படிகள் ஏறி இறங்கவேண்டியிருந்தது. இவ்வனப்பகுதியில் கூட பிளாஸ்டிக் பைகள் மற்றும் இதர குப்பைகளை காண முடியவில்லை. சில இடங்களில் மிக செங்குத்தாக ஏறும்படியாகவும், இறங்கும்படியாகவும் அந்த பாதைகள் அமைந்துள்ளன. சரி பத்தி தூரம் சென்றவுடன் கிட்டத்தட்ட ஒரு 500 மீட்டர் அளவுக்கு தொங்குபாலம் அமைத்திருந்தார்கள். அதிலிருந்து கீழே பார்க்கும்போது செத்துப்போன எங்கள் அய்யா தெரிந்தார். (அப்பாடா ஒரு வழியா அவரையும் பார்த்தாச்சு).









சுற்றிலும் மலைப்பகுதி நடுவில் நீர்நிலை. மிக அருமையாக இருந்தது. நான்கு கி. மீ. முன்பாக ஒரு Golf மைதானம். நாங்கள் சத்தம்போட்டு பேசிக்கொண்டு மகிழ்ச்சியா வந்துகொண்டிருந்தோம். அங்கு விளையாடியவர்களில் இருவர் எங்களை நோக்கி உஷ்ஷ்ஷ் என்று அமைதியாக இருக்குமாறு கூறினார்கள். இது என்ன மருத்துவமனையா? என்ன விளையாட்டுயா இது? ஒரு ஆளு ஓங்கி அடிக்கிற பந்தை எங்க விழுந்துருக்குனு எல்லோரும் சேர்ந்து போயி பாக்குறாய்ங்க...:-)) குழிய ரொம்ப தூரத்துல வச்சிக்கிட்டு விளையாடுறது நல்லாவா இருக்கு? ஆனா அந்த மைதானம் மிக மிக அழகு.









இப்பொழுதுதான் எங்கள் கட்டளைதளபதியின் சூட்சுமம் புரிந்தது. ஒரு குரங்கு கூட்டம் எங்களை எதிர்கொண்டு தாக்குதலுக்கு தயாராகி இருந்தது. அட பக்கிகளா எங்ககிட்ட எல்லா நொறுக்குத்தீனியும், மெதுபானமும் தீர்ந்து போன விஷயம் உங்களுக்குத் தெரியாம போச்சே... நாங்க கடமை வீரர்களா இந்த பகுதியில குப்பை போடாம... குப்பைத்தொட்டில போடுவோம்னு கொண்டுபோறத இப்படி புடுங்க வாறீங்களே... சரியான தருணத்தில் எங்கள் தலைமை ஒரு காலி போத்தலை சாதுர்யமா எதிரி படைக்கு கொடுத்து மொத்தக் குழுவும் தப்பியது.










இதன் பிறகு வெளியில் நடந்த சந்திப்பை அண்ணன் பிரபாகரின் இந்தப் பதிவில் படிக்கலாம். மனுஷன் வயசு ரொம்ப கம்மியா தான் தெரியுது. பதிவர் நாடோடி இலக்கியனும் உடன் இருந்தார். நான் அவரை சந்திப்பது இதுவே முதல் முறை. மிக சாந்தமாக இருக்கிறார். ஆனால் பதிவுல மட்டும் பட்டைய கிளப்புகிறார்.

அடுத்த பதிவர் சந்திப்பையும், இது போன்ற உலாக்களையும் தொடர்ந்து நடத்துமாறு அனைத்துப் பதிவர்களும் தலைமையை கேட்டுகொண்டது.




Wednesday, December 9, 2009

ஆட்டோ மீட்டருக்கு சூடு வைப்போம் வாங்க...

மக்கா, நம்ம ஊர்ல எதுக்கு பயப்படுரமோ இல்லையோ ஆட்டோவுக்கு மட்டும் ரொம்பவே பயப்படுவோம். அய்யய்ய...அரசியல் வியாதிகளை தாக்கி நம்ம பதிவு எழுதும்போது சொல்லுவாங்களே வீட்டுக்கு ஆட்டோ வரும்னு நான் அதை சொல்லலை. அதுக்கெல்லாம் நம்ம பயந்தா பதிவு எழுத எதுக்கு வரனும்???

நான் சொன்னது, ஆட்டோக்காரன் போடுற மீட்டருக்கு பல பேரு பயப்படுவாங்க. சென்னையில மட்டுமில்லாம, இந்தியாவின் பெரிய நகரங்கள்ல ஓடுற ஆடோக்கள் எல்லாம் அதை ஓட்டுற டிரைவருக்கு சொந்தமானது இல்ல. சில லோக்கல் அரசியல் பெரிய (தறு) தலைகளுக்கும், காவல்துறையைச் சார்ந்த துரைகளுக்கும் சொந்தம். ஐயா நான் சில நல்ல முதலாளிகளை இங்க குறிப்பிடல. அப்படி நல்ல வழில பொழைக்கிரவங்க மனசு வருத்தப் படாம போயி சாப்பிட்டிட்டு பொழைப்ப பாருங்க.

இப்படி பல ஆட்டோக்களுக்கு முதலாளியா இருக்கிறவங்க அந்த ஆட்டோவை ஓட்டத் தெரிந்த(?) சிலருக்கு வாடகைக்கு விடுவாங்க. சவாரி வருதோ வரலையோ அது பத்தி அவங்களுக்கு கவலை இல்ல. ஆனா கொடுக்க வேண்டிய தொகைய சரியா கொடுத்திடனும். இப்படி ஒரு முதலாளிக்கிட்ட வேலை பாக்குற பல ஆட்டோ டிரைவருங்க அவங்களுக்கு அடியாள் வேலை பார்ப்பது உபரி பலன். எல்லாம் முதலாளி விசுவாசம் தான். இப்படி சில பல அடிபொடிகளோட இருக்கதால இயல்பாவே அவருக்கு அரசியல் பலமும் வந்துடும்.

ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து பகல்ல ஒருத்தரும், இரவுல ஒருத்தரும் கூட ஓட்டி பிழைப்பாங்க. பெரும்பாலான நகரங்கள்ல ஆட்டோவுக்கு மீட்டர் போட்டு ஒட்டுரதில்ல. அரசு விதிய(?) கடை பிடிக்காம வாழ்வது தானே நம்ம விதி...! இப்படி முறையா ஓட்டி சம்பாதிக்கிற காசு கட்டுபடியாகுறதில்ல... சிலருக்கு கட்டுபடி ஆனாலும் அந்த வருமானம் போதிய அளவு இல்ல..(இந்த போதிய அளவுக்கு எப்போதுமே உயர் எல்லை என்பதில்லை). அதுனால, நம்ம குதர்க்கமா யோசிக்கிற புத்திய வச்சி கண்டுபிடிச்சது தான் இந்த மீட்டருக்கு சூடு வைக்கிற வேலை.

சில சமயம் நம்ம மக்கள் மீட்டர தொட்டு பாத்துட்டு... என்னப்பா மீட்டர் ஆம்ப்லேட் போடுற அளவுக்கு சூடா இருக்கு... அப்படின்னு நக்கலா கேக்குறது உண்டு. நம்மள்ள பல பேரு இவங்க என்ன ஒவ்வொரு சவாரி முடிஞ்ச உடனே பீடி, சிகரட்ட பத்த வச்சு சூடு வைப்பாங்கலோனு நினைப்பதுண்டு. ஆனா, சூடு என்பது சரியான வார்த்தை இல்ல. அது "ஜூட்".

ஆட்டோ மீட்டருக்கும், ஆட்டோ சக்கரத்திற்கும் இடையே ஒரு வயரு இருக்கும். இது சில பல பற்ச்சக்கரங்களின் மூலம் தொடர்ந்து இயங்கி நம்ம ஆட்டோ மீட்டர்ல காசு எவ்வளவு கொடுக்கணும்னு காட்டும். இந்த பற்ச்சக்கரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுல இருக்கணும். அதன் மூலம், ஆட்டோ இயங்க ஆகும் அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் கணக்கிடப்பட்டு குறைந்த பட்ச கட்டணம், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப் படனும்.

இந்த பற்ச்சக்கரங்கள் பெரிதாக(அதாவது குறிப்பிடப் பட்ட அளவில்) இருந்தால் மீட்டரின் கட்டணம் உயர சிறிது நேரம் பிடிக்கும். இந்த பற்ச்சக்கரங்களின் அளவுகளை நம்ம மெக்கானிக் உதவியுடன் சிறிய அளவுகளில் மாற்றி அமைத்தால் அந்த பற்ச்சக்கரத்தின் சுற்றும் நேரம் குறைந்து மீட்டரில் பணம் கூடுதலாக காண்பிக்கும். இதற்கு "ஜூட்" வைத்தல் என்று பெயர். அதாவது ஜூட் என்றல் வேகமாக. இதைத் தான் நம்ம...முக்கியமா சென்னை மக்கள் அவர்களது தமிழில் (ஸ்டைலில்) "சூடு" என்று மாற்றிவிட்டார்கள். இந்த ஜூட் வைக்கும் கலையை(?) அந்த ஆட்டோ முதலாளிகளும் அறிந்து கொண்டு இதை ஊக்கப் படுத்துகின்றனர். இதனால், வழக்கமாக வசூலிக்கும் நாள் வாடகையை விட கூடுதலாக ஓட்டுனர்களிடம் இருந்து வசூலிக்கின்றனர். அந்த டிரைவர்களுக்கு ஏமாற்று வழியில் கிடைத்த இந்த பணம் இப்போது கிடைப்பதில்லை. எல்லாம் முதலாளிகள் வசம். அதனால் தான் பல ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களில் மீட்டர் போட மறுக்கிறார்கள். டிஜிட்டல் மீட்டர் வைக்குமாறு அரசாங்கம் வற்புறுத்தினாலும்(?) தங்களின் அரசியல் செல்(லா)வாக்குகளால் அதை கடைபிடிப்பதில்லை.


இப்படி புதுப்புது மாறுதல்களை அரசாங்கம் செயல்படுத்தினால், புதிய உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து அந்த துறை சார்ந்த அரசியல் வியாதிகளுக்கும், அதிகா(ர)(வியாபா)ரிகளுக்கும் கப்பம் மொத்தமாக வந்துவிடுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த மாறுதலை கடைபிடிக்காத ஆட்டோ ஒட்டுனர்களிடமிருந்தும் தவணை முறையில் அங்காங்கே ரோடுகளில் மறித்து தண்டனைத் தொகையாக எந்த அரசு ரசீதுகளும் இல்லாமல் வசூலிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.

ஐயோ நான் ஜூட்... அட ஒட்டு போட்டுட்டு நீங்க ஜூட்டுங்கப்பா... :-)



Thursday, December 3, 2009

உள்குத்து கவிதைகள் - 4


செம்மொழி மாநாடு

தமிழினமே அழிந்து கொண்டிருக்கிறது - ஆனால்
தமிழைக் காக்க உலக செம்மொழி மாநாடு...
வீட்டை எரித்துவிட்டு
விறகைக் காப்பாற்றும்
வீர(ண)ர்கள்!...



ஊழல்

தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும்... - இது பழமொழி
நிரூபித்து விட்டனர் - எம்
அரசியல் வியாதிகள்!
தொட்டில் குழந்தை திட்டம் முதல்
சுடுகாட்டு கூரை வரை....



பெண்

நான் அணிகிறேன்
இரு
உள்ளாடைகளும்...
இரு மேலாடைகளும்...
எதிர் வரும் ஆணின்
காமம் மறைக்க!



செருப்பு

அமைச்சரின் கூட்டத்தில்
நிருபர்களுக்கு செருப்பணிய தடை...
அடுத்தமுறை
அண்டர்வேரால் அடித்துப் பாருங்களேன்!
வெட்கங்கெட்ட அரசியலும்...
வெளங்காத காவல்துறையும்...




Monday, November 30, 2009

ஆஸ்திரேலியாவுக்கு அடி ஆள் வேண்டுமா? :-)

தமிழ் வலையுலகப் பதிவர்களே! மற்றும் வாசகர்களே!

தங்களுக்கு என் அன்பு வணக்கம். நமது பதிவர்களும் வாசகர்களும் எழுத்து நடை அல்லது கருத்துக்களின் மேல் பல்வேறு விமர்சனங்கள் அல்லது எதிர் கருத்துக்கள் கொண்டிருப்பினும் அன்பால் இணைந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

இத்தளம் ஒரு சமுதாய முச்சந்தியாகவும் பயன்படுகிறது. எழுத்துக்கள் எதிர்த்து அடித்தாலும், கருத்துக்கள் காயப் படுத்தினாலும், நெஞ்சங்கள் நெருக்கமாகவும், கைகள் கோர்ப்பதற்காகவே காத்திருப்பதாகவும் உள்ளதை இப் பதிவுலகம் பலமுறை நிருபித்துள்ளது. அந்த வகையில் நானும் உங்களோடு இணைந்திருப்பதில் அலாதி ஆனந்தம் தான்.


இப்பதிவுலகில் எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் பல தேசங்களில் பரவியிருப்பது நம் மிகப் பெரிய பலம் தான். அந்த பலத்தின் பயனாக நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதும், பெற்றுக்கொள்வதும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.

அந்த வகையில் ஒரு உதவி கோரி இதை எழுதுகிறேன். எனது சகோதரர் ஒருவர் ஆஸ்திரேலியா-வில் உயர் கல்வி பயில விரும்புகிறார். அதற்காக சில ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் நடத்திய நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று, அக்கல்வி பயில கடக்க வேண்டிய பல படிகளில் ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.

அவருக்குள்ள சில சந்தேகங்களான, ஆஸ்திரேலியாவின் கல்வி முறை, அதன் பயன். செலவு நடைமுறைகள், பாதுகாப்பு, தங்குமிடங்கள் மற்றும் நிதி தேவை பற்றியனவற்றைப் பற்றி அங்குள்ள நண்பர்களுடன் உரையாடி தெரிந்துகொள்ள விரும்புகிறார். இது பற்றிய தகவல்களைத் தர நம் பதிவர்கள் மற்றும் வாசக நண்பர்கள் முன் வந்ததால் மிக மிகிழ்ச்சியடைவேன்.

தங்களது தொலைபேசி எண்களைத் தர விரும்பினால் எனது thisaikaati@gmail.com மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.

"மக்களே இதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையின்னு ஒட்டு போடாம போயிடாதீங்க. நீங்க எல்லாம் ஒட்டு போட்டாத்தான் பல வாசகர்களை சென்றடையும். நிறைய நண்பர்கள் எனக்கு தொடர்புக்கு கிடைப்பாங்க" :-)


மிக்க நன்றியுடன்

ரோஸ்விக்

டிஸ்கி: ஆஸ்திரேலியா-ல இருக்கிற இந்திய மாணவர்களை அடிக்கிறதா செய்திகளைப் பார்த்ததுனால, இவனும் (அ)படிக்க கிளம்பிட்டானோ என்னவோ?? :-) தலைப்பும் அப்படி வச்சாத்தானே, தலைப்புச் செய்திக்கு இது வரும்.


Saturday, November 28, 2009

பெண்களின் (செல்லப்)பெயர்கள்

"pen names" -னு ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது புனைப்பெயர்கள். அது நாமே நமக்கு இட்டுக்கொண்ட செல்லப் பெயர்களாகவும் இருக்கலாம். இந்தப் பதிவுல நம்ம பெண்(களின்) பெயர்களைப் பற்றி துவைப்போம்.(எத்தனை நாலு தான் அலசுவம்னு சொல்றது) நம்ம ஊருகள்-ல நமக்குத் தெரிஞ்ச சில பெண் பெயர்களை கவனிச்சுப் பார்த்தா ஒரு விஷயம் தெரியவரும். அதாங்க பெயரை சுருக்கி கூப்பிடுறது.

இப்பவெல்லாம் பெயர்களை பெரும்பாலும் சின்னதாவே வைக்க எல்லாரும் விரும்புறாங்க. ஆனா, அந்த சின்ன பெயரையும் இன்னும் சுருக்கி கூப்பிடுறதுல பெண்கள் ஒரு படி ஆண்களை விட முன்னாடி தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன். அந்த சுருங்கிய பெயர்கள் மிக செல்லமாகவும், அழகாகவும் இருக்கத் தானே செய்யுது. முந்தியெல்லாம் "அகிலாண்டேஸ்வரி"-னு பெயர் வைப்பாங்க. இப்ப 'அகிலா'-னு சுருக்கி வச்சாலுங்கூட இன்னும் அதை சுருக்கி அல்லது மாத்தி அகி / அகில்-னு கூப்பிடத்தான் நம்ம முயற்சி பண்றோம். இப்படிதாங்க "மகேஸ்வரி" இப்ப "மகி" ஆகிப்போச்சு.

ஆண்கள்லையும் பல பெயர்கள் இப்படித்தான் சுருங்கி போச்சு. "வெங்கடேஸ்வரன்" இப்பவெல்லாம் 'வெங்கட்' ஆக அதுவும் சுருங்கி 'வெங்கி' ஆகிப் போயிடிச்சு. "சத்யநாராயணன்" இப்ப 'சத்யா'-வாகிட்டாரு. பெரும்பாலும் ஆண்களோட பெயர்கள்ல உள்ள முதல் எழுத்தையும், தன் தகப்பன் பெயரின் முதல் எழுத்துக்களையும் சேர்த்து ஆங்கிலத்திலோ, தமிழிலோ சுருக்கி கூப்பிடுவாங்க. உதாரணமா மு. க. (முத்து.கருப்பன்), J.P (Joseph. Paulraj)...இன்னும் பலப்பல... இப்படி அழைப்பதும் ஒரு வகையில கவர்ச்சிகரமாத்தான் இருக்குது.

எனக்குத் தெரிந்து கேரள கிறித்தவப்(பெரும்பாலும்) பெண்களுக்கு ரொம்ப சின்னப் பெயர்களாத் தான் வைக்கிறாங்க...ஆங்கிலத்துல அதிகபட்சமா நான்கு எழுத்துக்களும், தமிழ்-ல எழுதிப்பார்த்தா அதிகபட்சமா இரண்டெழுத்துக் கொண்டதாவும் தான் இருக்கும். உதாரணமா "மினி" (mini), "நினி" (nini)-னு இருக்கும். கேட்கவே என்னா இனிமையா இருக்குதுப்பா...:-) (நல்ல வேலை சனி-னு யாருக்கும் வைக்கலை :-))) )

இதுபோல நம்ம தமிழ் பெண்களோட பெயர்களும் மிகச் சிறியதா நிறைய இருக்கு...கீதா, கவிதா, சவிதா, சுகந்தி, லட்சுமி, ஹேமா, நித்தியா, சகிலா, பவித்ரா-னு கலக்கலா இருக்கும். ஆனாலும், இதையும் சுருக்கி கீத்து, கவி, சவி, சுகன், லட்சு, ஹேமு, நித்தி, சகி, பவி-னு கூப்பிடுறதுல தான் நம்ம மக்களுக்கு சுகமே. இது பத்தாதுன்னு வச்ச பேரை விட்டுபுட்டு இன்னும் வேற பேர்களை சொல்லி கூப்பிட்டு மகிழ்வாங்க நம்ம வீடுகள்ல. பப்பி, அம்மு...எனக்கு வேற எதுவும் ஞாபகம் இல்லப்பா...உங்களுக்கு தெரிஞ்சா பின்னூட்டத்துல தெரியப்படுதுங்கய்யா...:-)

சில வீடுகள்ல இன்னும் பெரிய கூத்தெல்லாம் நடக்கும். நம்ம முன்னோர்கள் பேரை நமக்கு சூட்டி மகிழனும்னு விரும்பி அந்தப் பெயர்களை நமக்கு வைப்பாங்க. ஆனா, அந்தப் பெயர சொல்லி கூப்பிட்டா மரியாதை குறைவா நினச்சுகிட்டு வேற பெயரை சொல்லி கூப்பிடுவாங்க....உள்ள குழப்பம் பத்தாதுன்னு இது வேற. பாசக்கார பெத்தவங்களே! பெயரை சொல்லி கூப்பிடுற தைரியம் / மனப்பக்குவம் இருந்தா மட்டும் அந்த பெயர்களை புள்ளைங்களுக்கு வைங்க. அது மாதிரி, அந்த முன்னோர்களின் பெயர்கள் நம்ம புள்ளைங்க வாழுகிற காலக் கட்டத்துக்கு ஏற்ற மாதிரி இருக்குமான்னு யோசிச்சு வைங்க...சும்மா...நம்ம ஐயா பேரு "நஞ்சப்பரு", "சந்தோசம்" அதுனால உனக்கு இந்த பேரை வச்சம்னு சொன்னீங்கன்னா புள்ளைங்க உங்க மேல கொலைவெறி ஆகிடுவாங்க...உஷாரு...


முடிஞ்ச வரை ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளுக்குள்ள பேரு வைங்க...எதிர்காலத்துல எல்லாத்துக்கும் எளிதா இருக்கும். நமக்கு பிடித்த எல்லா பெயர்களையும் ஒரே புள்ளைக்கே வச்சு அழகு பாக்குறம்னு அவன அழ வச்சுப் பாக்காதீங்க. ஒருத்தருக்கு பேரு "அதிவீர ராம பாண்டிய சுந்தர பிறைசூடன்"-னு இருந்தா, அந்த பெயரை சில விண்ணப்பங்கள்-ல எழுதும் போது ஏதோ பக்கம் பக்கமா கட்டுரை எழுதற மாதிரி கஷ்டப்பட மாட்டாரு...? :-)



டிஸ்கி: இதுல வரும் பெயர்கள் எல்லாம் கற்பனை தான். இதுல உங்க பெயரும் இருந்தா மனசப் போட்டு குழப்பிக்காதீங்க...யாரையும் புண்படும் நோக்கத்துல எழுதலைப்பா மக்களே.



Wednesday, November 25, 2009

தெரிந்துகொள்வோம் - 5

*** உலகிலேயே தங்கத்தினால் செய்யப்பட்ட மிகப்பெரிய பொருள் எகிப்திய மன்னர் டூட்டன் ஹாமனுடைய சவப்பெட்டிதான். 1120 கிலோ எடையுள்ளது.











*** நாம் ஒரு வாக்கியத்தை எழுதி முடித்ததும் வைக்கப்படும் முற்றுப்புள்ளியை அறிமுகப்படுத்தியவர் "ஆல்டஸ் மனுசியஸ்" எனும் அச்சகத் தொழிலாளி.

*** தொழுநோய் மனிதனைத் தவிர வேறு மிருகங்கள், பறவைகள் முதலியவைகளுக்கு வருவதில்லை.

*** கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் உலகின் மக்கள் தொகை இருபது கோடிதான்.

*** பலூனில் பரந்த முதல் இந்தியர் - ராமச்சந்திர சட்டர்ஜி.

*** உலக அழகிப் போட்டி 1951-ம் ஆண்டிலிருந்துதான் நடந்து வருகிறது.

*** 1216-ம் ஆண்டு ரோம் நகரில் 'சாண்டா சபினா' என்ற தோட்டத்தில் தான் இத்தாலியின் முதல் ஆரஞ்சு மரம் நடப்பட்டது.

*** உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை மைனஸ் 83.3 டிகிரி சென்டிகிரேட். அண்டார்டிக்காவில், 'வோஸ்டாக்' என்ற இடத்தில் ஏற்படுகிறது.


*** ஆஸ்திரேலியாவில் உள்ள 'பிரஷ் டர்க்கி' என்னும் ஒருவகைப் பறவையின் குஞ்சு மட்டும் முட்டையவிட்டு வெளியே வந்ததும் பறக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.





*** பெயரளவுக்குக் கூட ஆறு இல்லாத நாடு - லிபியா.

*** ஒரு பாறையின் வயதை அதில் உள்ள காரியத்தின் அளவை வைத்து கணக்கிடப்படுகிறது.

*** உடலில் ஹார்மோனைச் சுரக்காத உயிரினம் பாக்டீரியா.

*** இந்தியாவில் விளையாட்டுப் பொருள்கள் அதிகமாகத் தயாரிக்கப்படும் நகரம் ஜலந்தர்.

*** பிரபல வங்கக் கவிஞர் தாகூர் மிகச்சிறந்த ஓவியரும்கூட. அவர் மூவாயிரம் ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.













*** ரவீந்திரநாத் தாகூர் பாடல் வரியிலிருந்துதான் ரேடியோவில் பயன்படுத்தப்படும் 'ஆகாஷ்வாணி' என்ற சொல் எடுக்கப்பட்டது.

*** சுவிட்சர்லாந்தில் 1971 முதல் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

*** பல்லி நீர் அருந்தாது வாழ்நாள் முழுவதும் உயிர் வாழும்.

*** அலகிலேயே பற்களைக் கொண்ட பறவை 'ஆர்க்கியோப் டெரிக்ஸ்'.

*** சந்திரனில் வாயு மண்டலம் கிடையாது. அதனால் எந்த ஒலியும் சந்திரனில் கேட்காது.
*** குட்டி போடும் பாம்பு 'ரஸ்ஸல் வைப்பர்' (விரியன்).



*** பப்பாளியில் ஆண்மரம் காய்க்காது.

*** இறைச்சியைவிட வேர்க்கடலையில் புரதம் அதிகம்.

*** இந்தியாவின் தட்பவெப்ப நிலை, குறைந்தபட்சம் -45 டிகிரி செல்சியஸ். அதிகபட்சம் 56 டிகிரி செல்சியஸ்.

*** பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள சர்வதேச எல்லைக் கோடு "டுராண்ட்".

*** சட்டக்கல்லூரி நிறுவப்படும் முன்பு சென்னை மாநிலக் கல்லூரியில் சட்டம் பயிற்றுவிக்கப்பட்டது.

---> 0O0 <---




Saturday, November 21, 2009

கிரியேட்டிவ் மூளைகள் - 1

நம்ம ஆளுங்ககிட்ட படைப்பாற்றல் / ஆக்கும் திறனுக்கு குறைவில்லங்க...ஒரு சின்ன சந்து கிடச்சா போதும்...கலக்கீடுவாங்க. நான் படிக்கும்போது எனது பள்ளி, கல்லூரியில் நடந்த கலைவிழாக்களில் எம் நண்பர்கள் அரங்கேற்றிய சில படைப்பாற்றல உங்களோட பகிர்ந்துக்கிறேன். கீழ் வருபவையெல்லாம் விளம்பர நிகழ்ச்சியாக நடித்து காட்டப்பட்டது.

1 ) பனியன் - ஜட்டி விளம்பரம்

நண்பன் ஒருத்தன் விளம்பர தொனியில சத்தமா, "ஆனந்த் பனியன்கள் - ஜட்டிகள். அணிய அணிய சுகம்.... ஏழு வண்ணங்களில்....மென்மையிலும் மென்மையாக......அணிந்து மகிழுங்கள் ஆனந்த் பனியன்கள் - ஜட்டிகள்..." -னு விளம்பரப்படுத்திகிட்டு இருந்தான்.

உடனே இன்னொரு நண்பன்: ஆமா மச்சி, ஆனந்த் யாரு உன் ரூம் மேட்டா? அப்படின்னு கேட்க...கூட்டத்தின் சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆகிவிட்டது.


2 ) சொட்டு நீலம் விளம்பரம்

இது பள்ளியில் படிக்கும்போது நடந்தது...ஒரு 11 -ம் வகுப்பு நண்பர் ஒருவர், ஒரு வாளியில தண்ணிய வச்சிக்கிட்டு, ஒரு கையில ஒரு சொட்டு நீலம் போத்தலும், மற்றொரு கையில ஒரு பனியனும் வச்சிக்கிட்டு விளம்பரப் படுத்த ஆரம்பிச்சாரு....

"எங்க கம்பெனியோட சொட்டு நீலம் வாங்குங்க....பக்கெட்டுக்கு பத்து சொட்டு போதும். உங்கள் துணிகளெல்லாம் பளிச்சிடும். இதுல இன்னுமொரு சிறப்பு என்னான்னா...சொட்டு நீலத்தை ஒரு பக்கெட்டு தண்ணில கலந்து பிராவைப் போட்டீங்கன்னா....ஜட்டி வரும். ஜட்டிய போட்டீங்கன்னா...பிரா வரும்...." அப்படின்னு சொன்னபடி கையில வச்சிருந்த பனியனை வாளிக்குள்ள போட்டுட்டு..வாளிக்குள்ள ஏற்கனவே யாருக்கும் தெரியாம போட்டு வச்சிருந்த ஜட்டிய தூக்கி காமிச்சாரு...திரும்ப ஜட்டிய வாளிக்குள்ள போட்டுட்டு...பனியனை எடுத்தாரு.... இப்படியே ரெண்டு மூணு தடவை செஞ்சு காமிச்சாரு பாருங்க....எல்லோரும் அசந்து போய்ட்டாங்க...(அது வெறும் ஆம்புள புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடம் அதனால பனியனை பிரா-னு சொல்லி அமர்க்களப் படுத்தீட்டாரு...)



Saturday, November 14, 2009

சுதந்திரமடைந்த ஃபிலிப்பினோ விபச்சாரி - (சி)சந்திக்க...



பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெண்களில் பலருக்கு, பெண் சுதந்திரம் என்பது என்னவென்று தெரியாமல் போனது வருத்தம்தான். பெண்ணடிமை எங்கெல்லாம் உள்ளதோ, அதை களைய முனையும் ஆண்களில் ஒருவனாக என்னை புரிந்துகொண்டு படியுங்கள்.


பெண் சுதந்திரம் பற்றி நம் நாட்டில் மட்டுமல்ல, இன்னும் பல வெளிநாடுகளிலும் தவறான புரிதலைக் கொண்ட பெண்டிர் அதிகம் உள்ளனர் என்பதிற்கு எடுத்துக்காட்டாகத் தான் இந்தப் பதிவு. இது ஒரு விபச்சாரியின் மூலம் நான் அறிந்துகொண்ட அனுபவம். உடனே இவனுக்கும் விபச்சாரிக்கும் எப்படி உறவு? என்ற குறுக்குப் புத்தியை தவிர்க்கவும். எய்ட்ஸ் நோய் பற்றி விளக்குபவன் எய்ட்ஸ் நோயின் கொடூரத்தை அனுபவித்தவனாக இருக்க வேண்டியதில்லை. :-)




இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் மாடல்களே


அவளது பார்வையில் பெண் சுதந்திரம் - கீழே உரையாடல் வடிவில்:


நீ எந்த நாடு?



ஃபிலிப்பைன்ஸ்.



நீங்க எந்த நாடு?


இந்தியா.


ஓ! எனக்கு இந்தியப் பெண்களை ரொம்ப பிடிக்கும்.


எதனால?


அவர்களுடைய நீண்ட மூக்கு. அப்புறம் அவர்களின் டிரஸ் சாரீ. அவங்க பொதுவாவே ரொம்ப அழகானவங்க.


அதுசரி. உங்க மூக்கு எங்க ஆளுங்க அளவுக்கு நீளம் இல்லைதான். ஆமா, உனக்கு இந்தியப் பெண்களை மட்டும் தான் பிடிக்குமா? அப்ப எங்க ஆம்புளைங்கள?


இல்ல இல்ல அவங்களையும் பிடிக்கும். அவங்களும் ரொம்ப ஹேண்ட்சம். அவங்களுடைய மீசை ரொம்ப பிடிக்கும்.




ம்க்க்கும்...இப்பவெல்லாம் மீசை இருக்கது எங்க நாட்டு பொண்ணுங்களுக்கே புடிக்க மாட்டேங்குது...


உங்க நாட்டுல மேரேஜ் ஃபங்க்சன் ரொம்ப நல்லா இருக்குமாமே...? எப்படி பண்ணுவாங்க? கல்யாணம் பண்ணினா பொண்ணு எங்க தங்குவா?


எங்க ஊர்ல கல்யாணம் பல விதமா நடக்கும். அவங்கவங்க ஜாதி, மதத்துக்கு ஏற்ற மாதிரி. கல்யாணம் முடிச்ச பொண்ணுங்க அவ புருசனோட வீட்டுல, சில சமயம் மாமனார், மாமியாரோட இருப்பாங்க.


அப்படியா! எப்படி கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் மாமனார், மாமியாரோட இருக்காங்க? அது டிஃபிகல்ட்டா இருக்காது? ஆமா, எத்தனை ஜாதி மதம் இந்தியாவுல இருக்கு?


ஆத்தா, இந்த கேள்விக்கு எனக்கே பதில் தெரியாது... ஆமா, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?


இல்ல. ஆனா, நான் சிங்கள் மதர்.


அப்புடின்னா?


எனக்கு கல்யாணம் ஆகல. ஆனா, எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு.


இதென்னா புதுக்கதையா இருக்கு. அப்புறம் எப்படி அந்த குழந்தை?


எனக்கு ஒரு பாய் ஃபிரெண்டு இருந்தான். அவனுக்கும் எனக்கும் பொறந்த குழந்தை தான் இது.



இப்ப உன் பாய் ஃபிரெண்டு இறந்து போயிட்டானா?


இல்ல. ஓடிப் போயிட்டான்.


கல்யாணம் ஆகமலே புள்ள பெத்துகிட்டியா? அப்ப எப்ப கல்யாணம் பண்ணிக்குவே?


ஆமா. எவனாவது கல்யாணம் பண்ணிக்கிற ஆசையோட எனக்கு கிடச்சா. உங்க இந்தியாவுல கல்யாணம் எப்படி பண்ணிக்கிறீங்க?


அங்க பெரும்பாலும் அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க.
அப்ப உங்க நாட்டுல லவ் மேரேஜ் கிடையாதா?



இருக்கு. ஆனா, ரொம்ப கஷ்டம். சில பேமிலில ஏத்துக்க மாட்டாங்க.


ஓ! அப்ப உங்க நாட்டுல சுதந்திரம் கிடையாதா?


அப்படி சொல்ல முடியாது.


உங்க நாட்டுல எல்லாரும் டிரஸ் ஃபுல்லா கவர் ஆகுற மாதிரி போடுறாங்களே...அது ஏன்?


அது அப்படி தான். அது தான் எங்க கலாசாரம்....வழக்கம்.


எங்க நாட்டுல, எங்களுக்கு முழு சுதந்திரம். நாங்க எப்படி வேணும்னாலும் டிரஸ் போட்டுக்கலாம். எப்படி வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். பேரண்ட்ஸ் ஒன்னும் சொல்ல முடியாது.


உன் டிரெஸ்ஸை பார்த்தாலே தெரியுது. இதை எங்க நாட்டுல ப்ரீகேஜி குழந்தைங்க தான் போடும். ஆமா, உனக்கு ஒரு குழந்தை இருக்கதா சொன்னியே...இப்ப யாரு பாத்துக்கிருவா? நீ இங்க சிங்கப்பூர்-ல இருக்க...


ஃபிலிப்பைன்ஸ்-ல எங்க அம்மா பாத்துக்குவாங்க. நான் அப்ப அப்ப சிங்கப்பூர்-க்கு இந்த தொழிலுக்காக வந்துடுவேன்.


ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆகிட்டு இப்படி இந்த தொழில் செய்யுறியே, ஏன்?


என்ன பண்றது? தினசரி வாழ்கை ரொம்ப எக்ஸ்பென்சிவா இருக்கு. பணம் வேணும்-ல.




அதுசரி. இப்புடி சம்பாதிச்சு...ஃபியூச்சர்ல உன் குழந்தைய என்ன பண்ணப் போற??


அவள நல்லா படிக்கவச்சு...நல்லா வேலைக்கு அனுப்பலாம்னு இருக்கேன்.


--- இவளின் வாழ்க்கையில் இருந்தே எது பெண் சுதந்திரம்? எது பெண்ணடிமை? எனப் புரிந்துகொள்ள முடிகிறதா உங்களால்?


அவள் விரும்பியதை உடுத்தியதிலோ, விரும்பிய படியெல்லாம் அவள் வாழ்க்கையை வாழ்ந்ததிலோ அவளுக்கு சுதந்திரம் கிடைத்து விடவில்லை. அவளது பாய் ஃபிரெண்டு-ம் அவளுக்கு விடுதலை கொடுத்து விடவில்லை.


மாறாக, அவள் தன் பெண் குழந்தையை நல்லா முறையில் படிக்க வைத்தால் அதுவே அவளுக்கு கிடைத்த சுதந்திரம். இல்லையா?


நம் நாட்டிலும் பெண்கள் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளையும், வசதிகளையும் நாம் வழங்க வேண்டும். அவர்கள் நம் குடும்ப வாழ்வில் சிறந்து விளங்க தேவையான தைரியத்தையும், மன உறுதியையும் நாம் ஊட்ட வேண்டும்.


நல்ல குடும்பங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட நல்ல குடும்பங்களை உருவாக்கும் உயரிய பொறுப்பு என் அருமை பெண் குலத்திற்கு உண்டு என்பதை பெண்களே நீங்கள் உணருங்கள். அடிமைத்தளையிலிருந்து பெரும்பாலான பெண்கள் விடுபட்டுவிட்டார்கள். இன்னும் அடிமையாய் நடத்தப் படுபவர்களை விடுவிக்க சரியான முறையில் முயலுங்கள். உங்களுக்குத் தோள்கொடுக்க பல பாரதிகளும், பெரியார்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் உங்கள் தந்தையாகவோ, அண்ணன் தம்பியாகவோ அல்லது கணவன்மார்களாகவோ வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து நல்ல சமுதாயம் படைக்க வாரு(ழு)ங்கள்.





Saturday, November 7, 2009

தெரிந்துகொள்வோம் - 4

உலகில் உள்ள விஷ மரங்களில் இந்தோனேசியாவில் உள்ள 'உபர்ஸ்' மரம்தான் அதிக விஷமானது.

ஒவ்வொரு முழு நிலவுக்கும் இடைப்பட்ட காலம் 291/2 நாட்கள்

புகழ்பெற்ற ஈஃபில் டவரின் பிளானை வரைய ஆறாயிரம் சதுர கஜம் காகிதம் தேவைப்பட்டதாம்.

உலகில் மிக அகலமான பாலம் சிட்னி ஹார்பர் பாலம்.








உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடு ஜப்பான் அல்ல; மெக்சிகோ

நண்டுக்கு ஐந்து ஜோடி கால்கள் உண்டு. செவுல்களால்தான் அது மூச்சுவிடும்.

வைக்கோலால் ஆன தொப்பிகளை ஈக்வடாரில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்

இந்தியாவில் அதிகம் பயிராகும் மிளகாய் ரகம் - ஹங்கேரியன் 'பாப்ரிகா'


இந்தியாவில் மலை ஏறுவதற்கான கிளப்புகள் அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில்தான் உள்ளன.

சுறா மீனை ஜப்பானியர்கள் 'கடல் தங்கம்' என்று அழைக்கிறார்கள்

'சிரிப்' என்ற பறவை நீர்ப்பரப்பின் மேல் தன் கூட்டைக் கட்டுகிறது.

முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை.

இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1945-ம் ஆண்டு 'உலக ஐக்கிய நாடுகள் சபை' அமைக்கப்பட்டது.

பழந்தமிழர் காலம் சுமார் கி.மு.10,000 ஆண்டில் தொடங்குவதாக கூறப்படுகிறது.

லட்சத்தீவில் மொத்தமுள்ள 36 தீவுகளில் 11 மட்டும் மக்கள் வசிக்கிறார்கள்.

இறந்து போனவர்களின் உடலை பதம் செய்து காப்பாற்றுவதற்கு பெயர் 'எம்பாம்'.

'இம்பாலா' என்ற மான் ஒரே தாவலில் 8 அடி உயரம் துள்ளி 25 அடி தூரம் பாயும்.


அமெரிக்காவில் ஹெலிகாப்டர்களை டாக்சிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை 'சாப்பர்ஸ்' என்று அழைக்கிறார்கள்.

தலைவலிகளில் 47 விதங்கள் இருக்கின்றன.

மனித சிந்தனையின் வேகம் மணிக்கு 150 மைல் செயல்படுகிறதாம்.

'செரியம்' எனப்படும் பொருளை நகத்தால் கீறினாலே தீப்பற்றிக் கொள்ளும்.

கழுகு பறக்கும்போது அதன் கால்களும், தலையும் கீழ் நோக்கியே இருக்கும்.

உலகில் மிகுதியான மக்களால் பயன்படுத்தப்படுவது ரோமன் எழுத்துக்கள்தான்.

வெயில் 150 டிகிரிக்கும் மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.




Friday, November 6, 2009

தண்டனைகள் தப்பினால் தப்புக்கள் குறையுமா?


நம்ம ஊர்ல குற்றங்கள் பெருகிகிட்டே வருது. இது எப்ப குறையும்னு நமக்கெல்லாம் ஒரே ஏக்கமா இருக்குது. எப்படி குறையும்?

குற்றங்கள் குறையனும்னா, அது குறையிரதுக்கான வழிமுறைகளை நம்ம ஏற்படுத்தணும் / கடைபிடிக்கணும். இந்திய குற்றவியல் தடுப்பு சட்டம் வருசையா எண்களையும், ஆங்கில எழுத்தையும் கூட்டு சேர்த்துகிட்டு சில புத்தகங்கள்ல தூங்கிகிட்டு இருக்குது. ஒரே சட்டத்துக்கு பல உட்பிரிவுகள். அது சில வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்குமே புரியாது போல. சிவாஜி படத்துல வருமே செக்சன் 49D, 498B....இது மாதிரி இன்னும் என்னென்னமோ இருக்குது போல.

சட்டத்தை படிக்கும் போது எல்லாத்தையும் படிக்கிற நம்ம ஆளுக, களத்துல இறங்குன உடனே அதுல உள்ள எல்லா ஒட்டைகல்லையும் புகுந்து இவங்க வெளிய வர்றதுமட்டுமில்லாம குற்றவாளிகளையும் வெளிய கொண்டுவந்துடுறாங்க.

தேசப்பிதா சொன்னதுல எதை பின்பற்றுகிறார்களோ இல்லையோ, 1000 குற்றவாளி தப்பிக்கலாம் அனால், ஒரு நியாயவாதி கூட தண்டிக்கப்படக் கூடாது அப்படிங்கிறதுல மட்டும் கடைபிடிக்கிறாங்க. ஆனா என்ன, லட்சக் கணக்குல குற்றவாளிங்க தப்பிச்சிட்டாங்க, தப்பிச்சுகிட்டு இருக்காங்க...ஒருத்தன்கூட தண்டிக்கப்படல. பாவம் அந்த அரைநிர்வாணக் கிழவனுக்கு தெரியல, நம்ம ஆளுங்களோட நேர்மை, யோக்கியதை.


நம்மில் பல பேர் நம்ம நாடு ரொம்ப பெரிய நாடு அதுனால, இதுல அவ்வளவு எளிமையா எல்லா குற்றங்களையும் குறைச்சிட முடியாதுன்னு சொல்லிக்கிட்டு திரிவோம். குற்றங்களை நம்ம வீடு, பள்ளி, நம் ஊர், நம் மாவட்டம், மாநிலம், நாடு-ன்னு பார்த்த இடங்களில் எல்லாம் திருத்தியோ, குற்றங்களுக்கேற்றாற்போல் தண்டனைகள் வழங்கியோ தடுக்க முயன்றால் முடியாதா என்ன?

ஒரு மனித சமுதாயம் வீட்டில் தான் தொடங்குகிறது. ஒரு தாயும், தந்தையும் தன் பிள்ளையின் மீது உண்மையான அக்கறை கொண்டு அவர்களை நல்ல முறையில் வளர்த்தால், ஒரு பள்ளி ஆசிரியர் புத்தகப் பாடங்களை போதிப்பதை மட்டும் செய்யாமல் (அதை மட்டுமாவது செய்யுங்க-ன்னு இப்ப கெஞ்சுற நிலமையில இருக்குது), வாழ்க்கை பற்றிய புரிதலை, சாதித்தவர்களின் (சாதித் தலைவர்களின் அல்ல)வாழ்க்கையும் எடுத்துக்கூறி வளர்த்தால் குற்றங்கள் குறைக்கப்படுவது மிக மிகச் சாத்தியமே.

சிறு குற்றங்கள் ஆனாலும், அவற்றின் பாதகத்தை குற்றம் புரிந்தவருக்கு உணர்த்தவேண்டும். வெறுமனே தண்டித்தலிலும் முழுப் பலன் கிட்டாது. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு "Low Crime doesn't mean No Crime". சிறிய குற்றங்கள் மன்னிக்கப்படக் கூடியதாக இருக்கலாம். ஆனால், குற்றவாளி தன் குற்றத்தையும் அதன் பாதகங்களையும் உணர்ந்தால் அவராகவே அது போன்ற குற்றங்களையாவது எதிர்காலத்தில் செய்யத் தயங்குவர்.

தன் பிள்ளை செய்வதெல்லாம் சரியென எல்லா விஷயங்களிலும் நினைப்போர், தாங்களே தங்கள் பிள்ளைகளை குற்றவாளி கூண்டின் முதல் படியில் ஏற்றுகிறார்கள் என்று அர்த்தம். பிள்ளைகளுக்கு பாசம் காட்டுங்கள். செல்லம் என்றுமே காட்டாதீர்கள். பாசத்திற்கும், செல்லத்திற்கும் மிகக் குறைந்த இடைவெளி என்பதை அறிந்திருப்பீர்கள். பாசம் உங்கள் குழந்தையின் எதிர் கால வாழ்விற்கு நீங்கள் அளிக்கும் ஊட்டச் சத்துள்ள உணவு. செல்லம் நீங்களும் உங்கள் குழந்தையும் சேர்ந்து அருந்தும் விஷமான போதைப்பொருள். செல்லத்தால் விளையும் விபரீதங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு குற்றத்தின் பின்னணியைப் பார்த்து, சில சமயங்களில் மன்னிக்கப்படுவதில் உடன்படலாம். சில குற்றங்கள் நிரூபிக்கப்பட்டும், அவற்றிற்கு சரியான தண்டனை வழங்காமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பது உயரிய கருத்தாக இருக்கலாம். அனால், அந்த குற்றவாளி மட்டும் தான் திருந்த வாய்ப்பிருக்கிறது. கடும் தண்டனை அளித்திருந்தால் இது போன்ற குற்றம் செய்ய பல குற்றவாளிகள் உருவாவது தடுக்கப்பட்டிருக்கும். குற்றம் செய்பவர்களுக்கு திருந்த வாய்ப்பளிப்பது என்பது மற்றும் பலருக்கு குற்றவாளி ஆகும் வாய்ப்பளிப்பதாகவே பொருள்படாதோ?

கணவன் மனைவி விவாகரத்து வழக்குகளில், பலமுறை அவர்கள் ஒன்றுகூட வாய்பளித்து கடைசியில் தீர்ப்புக் கூறுவது பொருத்தமாக இருக்கும். அதே சமயம், இன்னும் பிற குற்ற வழக்குகளில், விசாரணைகள் ஒத்தி போடப்படுவது எதனால்? குற்றவாளி திருந்தவா? வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை இன்னும் அருமையாக ஜோடிக்கவா? சட்டங்களின் ஓட்டைகளை முற்றிலும் தெரிந்துகொண்டு தப்பிக்கவா? பல குப்பை வழக்குகள் கூட பல ஆண்டு காலம் நடந்துகொண்டிருப்பது நமது நாட்டின் முக்கிய தூண் பழுதடைந்து விட்டதைத்தான் காட்டுகிறது. அல்லது நம் நீதித்துறையின் கையாலாகாத்தனம் எனப் பொருள் கொள்ளும்படி உள்ளது.

நீதிமன்றங்கள், நமது தொல்லைக்கட்சிகளில் பண்டிகை தினங்களில் இடம்பெறும் பட்டிமன்றங்களுக்கும், வழக்காடுமன்றங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் செயல்படுவது வெட்கக்கேடு. இதைவிடக் கேவலம் சட்டம் பயிலும் மாணவர்களின் சாதீய நிலைப்பாடு. எதை நோக்கி போகிறது நம் நீதித்துறை? நீதித்துறையில் நீதி குறைந்து நிதித்துறையின் கிளையாக செயல்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இரு தரப்புகளுக்கு கொடுக்கப்பட்ட உரிமை தான் வாதம். அது மருந்தில்லா நோயாகி, வாதத் திறமைக்கு தீர்ப்பு பரிசாக அளிக்கப்படுகிறது.

காவல்துறை ஒழுங்காகச் செயல்பாடாலே நாட்டில் பல வகையான குற்றங்கள் கட்டுக்குள் இருக்கும். ஆனால், காவல் துறையின் செயல்பாடுகள் பணக் கட்டுக்குள் அடிமையாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. புகார்கள் முறையாகப் பதியப்படுவதில்லை. எவ்வளவு பெரிய குற்றமாகினும் வழக்குப் பதிவதில் காவல்துறை மும்முரம் காட்டுவதில்லை (எமக்கு நடந்த அனுபவம்....அது தனிபதிவாக எதிர்காலத்தில் வரலாம்). நெருங்கிப் பழகிய காவல்துறை அதிகாரியிடம் கேட்டால், ஒரு வழக்குப் பதியப்பட்டால், அதற்க்கு தேவையான, சாட்சியங்கள் சரியாக விசாரித்து சேர்க்கப்பட வேண்டும். நிறையா எழுத்துவேலைகள் இருக்கும். சரியான செக்சன் பார்த்துப் போட வேண்டும். இந்த வழக்கு சம்பந்தமான கோப்புகளை நீதி மன்றத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். இன்னும் பல நடைமுறை சிரமங்கள் உள்ளதாகச் சொல்கிறார் (வேலை செய்வதற்குத்தானே கூலி. கூலி உயர்விற்கு மட்டும் முதலில் கொடி பிடிக்கிறார்கள்). இது வேதனையான மற்றும் அதிர்ச்சியான விஷயமாகப்படுகிறது.

நீதி மன்றங்கள், எவ்வித பாகுபாடுமின்றி நமது அரசாங்கத்தை கண்டிக்கவோ, தண்டிக்கவோ உரிமை இருந்தும் அவற்றை பயன்படுத்தாமல் அரசியல் வியாதிகளின் அடிவருடிகளாக ஆகிப்போனது வருத்தத்திற்குரியது. ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்களான நம்மால் கண்டிக்கப்படக் கூடியதுமாகும். நீதி தேவதையின் கண் கட்டியிருப்பதை தமக்கு சாதகமாக்கி, நீதி தராசின் ஒரு பகுதியில் வாதமும், மறு பகுதியில் பணமும் மட்டுமே வைத்து நிறுக்க / நிரூபிக்கப்படுகிறது. இந்த நீதித்துறை தன் பலம் அறியாத செத்த யானையாக உள்ளது. (பரியது கூர்ங்கோட்டதாயினும் யானை வெறும் புலிதாக்குரின் - வள்ளுவன்)

காவல்துறையும், நீதித்துறையும் ஒரு குடும்பத்தின் கணவன் மனைவி போன்ற நெருக்கம் இருக்கப்பட வேண்டியவர்கள் (குற்றமற்ற தேசம் உருவாக்க). இவர்களே விவாகரத்து கோரும் அளவிற்கு இன்றைய சூழல் இருப்பதை எங்கு போய் சொல்வது? கட்டப் பஞ்சாயத்து தடுப்பு சட்டம் முதலில் காவல் துறையில் தான் அமுல் படுத்தப்பட வேண்டும்.

இப்போதெல்லாம் குற்றவாளிகளை வேறெங்கும் போய் தேடவேண்டியதில்லை. பெரும்பாலான குற்றவாளிகள், நீதித்துறை, காவல்துறை மற்றும் அரசியல் ஆகியவற்றிலோ அல்லது அவர்களின் பின் புலத்திலோ தான் இருக்கிறார்கள் என்பதை விஜய் படத்தின் குத்து பாடல்களுக்கு ஆடும், டவுசர் போடாத குழந்தைகள் கூட சொல்லும்.

மேலே குறிப்பிட்ட துறையில் மிக மிகச் சில நல்லவர்களும், வல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை மேல சொன்ன கருத்துக்கள் எந்த விதத்திலும் பாதிக்காது. அவர்கள் இத்துறைகளில் பெருகிய களைகளை களைய தூவப்பட்ட களைக்கொல்லிகள்.

இனியொரு விதிசெய்ய வேண்டிய அவசியமில்லை. கொண்டவிதிகளை செம்மைப்படுத்தி, சரியான முறையில் பயன்படுத்தி புதிய உலகம் படைப்போம்.




Tuesday, November 3, 2009

உள்குத்து கவிதைகள் - 3


பெண் குழந்தை



மரபுக்கவிதையாக - ஒரு
புதுக்கவிதை வேண்டுமென்ற
மனைவிக்கு....
பெண் குழந்தை!









தொலைபேசி


நாங்கள் எதுவும்
பேசுவதில்லை - ஆனால்
எங்கள் பெயர் மட்டும்
தொலைபேசி...







மழலை


எழுதவும் தெரியாது
படிக்கவும் தெரியாது - நீ
எழுதுகிறாய் . . .
ஓராயிரம் ஹைக்கூ !
மழலையின் பேச்சுக்கள்







ஊடல் கூடல்


மறக்க நினைத்த பொழுதுகளும்
மறைந்து நினைத்த பொழுதுகளும் - என்
மனதில் ஊசலாடிக் கொண்டிருகின்றன...
நம் ஊடலும் கூடலும்!







செயற்கைக்கோள்


உலகிலேயே அதிக
நீலப்படம் எடுத்தவருக்கு
வானுயரத்தில் வாழ்வு!
செயற்கைக்கோள்....


Saturday, October 31, 2009

தெரிந்துகொள்வோம் - 3


கி.பி. 400-ம் ஆண்டு வரை சீனாவில் 'இஸ்சா' என்ற பெயரில் தேயிலையை மருந்தாகவே பயன்படுத்தி வந்தனர்.

சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய 'சீன்-ஹி-கிராம்பி' அச்சுவர் உறுதியுடன் விளங்க பத்து லட்சம் தொழிலாளர்களின் இரத்தத்தால் சுவரை மெழுகச் செய்தானாம்.

மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ஒளியைக் கூட தேனியால் பார்க்க முடியும்.

வண்ணத்துப் பூச்சிகள் தன பின்னங்கால்களால் தான் சுவையை அறிகின்றன.

வளிமண்டலம் என்பது பூமியிலிருந்து 9௦௦ கி.மீ. உயரத்திலுள்ள பகுதியாகும்.

பகலைவிட இரவில் கப்பலின் எடை அதிகமாக இருக்கும். நிலவொளியில் ஆகர்ஷண சக்தி அதிகரிப்பதால் ஏற்படும் மாற்றம் இது.

சென்னை மெரீனா கடற்கரையின் நீளம் 13 கி.மீ.

மான்களின் வயதை அவற்றின் கொம்புகளில் உள்ள கிளைகளை வைத்து கணக்கிடுகிறார்கள்.

உலகில் லண்டனில் மட்டும் தான் மனித எலும்புகளின் வங்கியுள்ளது.

தாய்லாந்து 'வெள்ளை யானைகளின் நிலம்' என அழைக்கப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள வெளன்சியா சர்ச்சிலுள்ள ஒரு பாத்திரத்தில் தான் இயேசு கடைசியாக உணவருந்தியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவ ஆய்விற்காக 'ரீசஸ்' என்ற குரங்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.




இந்தியப் பெருங்கடலில் காணப்படும் அதிசய மலர் 'காக்டஸ்'. இது ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்கிறது.

அரபி மொழி உலகில் 25 நாடுகளில் அரசு அதிகாரபூர்வ மொழியாக விளங்குகிறது.

பிரெஞ்சு மொழி 32 நாடுகளிலும், ஆங்கிலம் 58 நாடுகளிலும் அரசு அதிகார மொழிகளாய் இருக்கின்றன.



திருமணமாகாத ஸ்பானிஷ் பெண்ணிற்கு பெயர் 'ஸெனோரிட்டா' என்பது.

சர்.சி.வி. ராமன் விஞ்ஞானத்தில் ஆர்வம் மிகுதியால் அதிக வருவாயுள்ள அரசாங்கப் பதவியை விட்டு விலகி குறைந்த வருவாயுள்ள பல்கலைக் கழகப் பேராசிரியராக வேலை ஏற்றுக் கொண்டார்.




பிலிப்பைன்ஸ் நாட்டில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பேசும் எல்லா மொழிகளும் அந்நாட்டு தேசிய மொழிகள்தான்.


உலகில் தாவரங்கள் தோன்றி 43 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

புதுவருடப் பிறப்பன்று வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வதால் அதிர்ஷ்டம் வெளியேறிவிடும் என்ற நம்பிக்கை சீனாவில் உள்ளது.