Sunday, January 31, 2010

தெரிந்துகொள்வோம் - 7

*&* சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.

*&* நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.

*&* ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.

*&* வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.

*&* ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.

*&* வளர்பிறை கோடுகள் மேல்நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.

*&* கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

*&* கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.

*&* எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.

*&* "O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.

*&* பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.

*&* 'பிட்யூட்டரி' கிளாண்ட்ஸ்க்குத்தான் 'மாஸ்டர் கிளாண்ட்ஸ்' என்று பெயர்.

*&* அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.

*&* நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.

*&* VOTE - Voice Of Taxpayers Everywhere.

*&* ஆப்பிரிக்காவில் "ஜெர்பா" என்னும் ஒருவகை எலிகள் தலையைத் திருப்பாமலே பின்னால் உள்ள பொருளைப் பார்க்கும். இது 10 அடி தூரம் தாவும் திறன் கொண்டது.

*&* ஒரு டேபிள் ஸ்பூன் என்பது 120 துளிகள் கொண்டது.

*&* பறக்கும்போது ஒரு வினாடிக்கு 120 முறை சிறகுகளை அசைக்கும் ஈயைப் போன்ற ஒரு பூச்சியின் பெயர் "கிகாடாஸ்".

*&* ஓர் ஆப்பிள் துண்டிலுள்ள சக்தி சராசரியாக ஓர் ஆண் 35 நிமிடம் ஓடவும் அல்லது ஒரு பெண் 50 நிமிடம் ஓடவும் தேவையான சக்திக்கு நிகரானது.

*&* அசாமில் உள்ள காண்டாமிருகம் சரணாலயம் - "காசிரங்கா".

*&* இங்கிலாந்தில் உள்ள 'மான்கல்' என்ற பூனை இனத்திற்கு வாலே கிடையாது.

*&* மாறுகுரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே.

*&* அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியாக இருந்து பிறகு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் "வில்லியம் டாஃபட்".

*&* மனிதர்களுக்கு வாசனை அறியும் மொட்டுக்கள் 50 லட்சம் உள்ளன.

*&* உலகிலேயே மிகப்பெரிய பவளப்படிவுகள் ஆஸ்திரேலியாவில் உள்ள "தி கிரேட் பேரியர் ரீஃப்" ஆகும்.



Friday, January 29, 2010

பேர் வைக்கும் பேறுபெற்றோர் - விகடன் பிரசுரம்

வழக்கம்போல சில பல வலைப்பூக்களை மேய்ந்துகொண்டிருக்கும்போது (படித்துக் கொண்டிருக்கும்போதுன்னு சொல்லக்கூடாதோ??), "ஒரு பேர் வைங்களேன், ப்ளீஸ்!"- னு ஒரு பதிவுத் தலைப்பை பார்த்தேன். ஆஹா, யாரோ ஒருத்தரு இன்னும் பேரு இல்லாம... வலைத்தளங்களும் எழுத வந்து ரொம்ப சிரமப்படுறாரேனு, சுட்டியை அமுக்கி உதவலாமுனு த(க)ளத்துல இறங்குனேன். சுட்டியைப் பார்த்த உடனே தான் தெரிஞ்சது நம்ம ரவிபிரகாஷ் அண்ணனோட "விகடன் டைரி"-னு.

ஆத்தாடி, அண்ணாத்தையே பேரு வைக்கிறதுல கில்லாடின்னு தெரிஞ்சுச்சு. இவரு எதோ உட்டாலக்கடி பதிவு போட்டிருப்பாரோனு முழுசா படிச்சுப் பார்த்தா... அந்தப் பதிவுல அருமையான ஒரு சந்தர்ப்பத்தை வாசக பெருமக்களுக்குக் கொடுத்திருந்தாரு.அதாவது பெரிய மனுசங்க சொன்ன தத்துவ மொழிகளை, நம்ம அண்ணே எளிமையா புரியிறமாதிரி கொஞ்சம் கொஞ்சம் மாத்தி அவள் விகடன்-ல "பத்துவம்"-னும், விகடன்ல "டிக்... டிக்... டிக்..."-னும் தொகுத்திருந்தாரு. பல வாசகர்கள் விரும்பிக்கேட்டதால அத ஒரு தனி புத்தகமா போட்டுரலாம்னு முடிவுபண்ணி அதுக்கான வேலையில விகடன் பிரசுரம் இறங்கிடுச்சு.

தத்துவமெல்லாம் புத்தவ(க)மா வந்தாலும், தலைப்புக்கு தலைய சொரியவேண்டியதாப் போச்சாம். (அண்ணன் சொன்னாரு நானும் நம்பிட்டேன்). நம்ம வாசகப் பெருமக்களுக்கு இந்த அறிய (அதாங்க தலைய சொரிய) வாய்ப்பைக் கொடுத்து நம்மகிட்டையே அன்பா வாயைப் புடுங்கிட்டாரு. பத்தோட ஒன்னு பதினொன்னு அத்தோட ஒன்னு நான் ஒன்னுனு நானும் போட்டியில குதிச்சுப்புட்டேன்.

அரசியல்வாதிங்க ஊருக்குள்ள அதிசயமா புகுந்தா... பெத்த புள்ளை மட்டுமில்லாம செத்த கிழவனையும் தூக்கிகிட்டு ஓடுவாய்ங்க. எதுக்கு? பேரு வைக்கவா?? அட போங்கப்பு... அங்கயும் கொஞ்சம் வசூலு தான். அதுமாதிரி அண்ணேன் கேட்டுருவாரோனு கடகடத்த மனசோட கடைசி வரை படிச்சா... அட அவுக நமக்கு அந்த பொஸ்தகத்தை இலவசமா, அன்பளிப்பா தாரேன்னு சொன்னாக. விடுவமா நாங்க...??

பேருன்னு சொன்னா நூறா எழுதிக்கொடுக்குறது? நறுக்குன்னு நாலு... நானும் எழுதி வச்சேன். பொசுக்குன்னு அதுல மூன போட்டிக்குன்னு பொத்தி வச்ச்சாக.

1) அகநானூறு, புறநானூறு போல - பொன்மொழி நானூறு
2) தங்க மொழியில் தங்கிய மொழிகள்
3) விழிதிறக்கும் (பொன்)மொழிகள்
4) பொன்மொழிகள் என்மொழியில்


நம்ம பதிவர்கள் பல பேரும் பலத்த போட்டியில் நிற்க... தோழி கிருபாநந்தினி, அண்ணன் பின்னோக்கி மற்றும் நான் (ரோஸ்விக்) எழுதிய தலைப்புகளை, கடைசியா பரிந்துரை பண்ணியிருந்தாங்க. கிருபாநந்தினி (அதாங்க படித்துறை பதிவர்) சொன்ன புதுமொழி நானூறு (நான் பொன்மொழி நானூறு-னு சொல்லியிருந்தேன்) இறுதியாக முடிவு செய்யப்பட்டது. அண்ணன் பின்னோக்கி - "எனர்ஜிக்கு ஒரு வரி டானிக்"-னு தலைப்பிட்டிருந்தார். அது "எனர்ஜி டானிக்" என சிறிது திரித்து எடுத்துக்கொள்ளப் பட்டது. (எனர்ஜி டானிக்-னு நீங்க வேற எதையும் சொல்லலையில அண்ணே! )

ஹைய்யா...பேர் வெச்சாச்சு!-னு அண்ணே ரவிபிரகாஷும் முடிவை அறிவிச்சிட்டாரு. இப்ப அந்த புத்தகத்தோட பேரு தோழி கிருபாநந்தினி -யின் பரிந்துரையை சிறிது திருத்தி "புதுமொழி 500"-னு வச்சிருக்காங்க... புத்தகம் வெளி வந்த உடனே எல்லாரும் வாங்கி படிங்க மக்கா... :-)

ரவிபிரகாஷ் அண்ணே வாய்ப்பளித்து, புத்தகம் அனுப்பும் உங்களுக்கும், விகடன் நிறுவனத்தாருக்கும் நன்றிகள்.



Tuesday, January 26, 2010

எங்கே போகிறது நம் குடியரசு?

நாமும் சுதந்திரம் பெற்றுவிட்டோம். நம் நாடும் குடியரசு நாடாகி 60 ஆண்டாகிவிட்டது. எங்கே போகிறது நம் குடியரசு? சமாதானத்திற்கு அடையாளமான வெள்ளை உடையணிந்து வெள்ளையனையும் நாம் வெளியேற்றிவிட்டோம். இன்றுவரை நம் வெள்ளை உடை தான் மாறவில்லை. மற்றவை எல்லாம் மாறிவிட்டது... நம் தலைவர்களின் தியாகம், தேசப்பற்று மற்றும் சரியான வழிநடத்துதல் உட்பட.


வழக்கமாக நம் குடியரசு தின அணிவகுப்பில் பல மாநில கலாச்சார, பாரம்பரியங்களை விளக்கும் வகையில் நடனங்களும், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளும், புதிய போர் கருவிகளும் நமது முப்படைகளுடன் கலந்துகொள்ளும். முப்படைகளின் தளபதியான நம் குடியரசுத் தலைவர் அந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். ஆனால் இன்று அந்த பதவியை நம்மவர்கள் அவ்வணிவகுப்பில் கலந்துகொண்ட மற்றொரு பொம்மையைப் போல மாற்றிவிட்டார்கள். இது நகைப்புக்குரியதன்று. சிந்தனைக்குரியது.


மக்களால், மக்களுக்காக, மக்களாலே நடத்தப்பட வேண்டிய மக்காளாட்சி இன்று சில குடும்பங்களின் மன்னராட்சி போலவே நடந்து வருகிறது. தொண்டற்படைகளைக் கொண்டு வளர்ந்துவந்த நமது அரசியல் கட்சிகள் இன்று தங்களின் குண்டர்படைகளைக் கொண்டு ஆட்சி புரிந்து வருகிறது. லோக் சபாக்கள் லொள்ளு சபாக்கள் போலவும், ராஜ்ய சபாக்கள் அந்ததந்த மாநிலங்களின் ராஜாங்க சபாக்கள் போலவும் செயல்பட்டுவருவது வேதனைக்குரியதே. சட்டசபை ஒன்றும் சளைத்ததில்லை என்பதுபோல அதன் செயல்பாடுகளும் நம் குடியரசின் கால்களை ஊனமாக்கி வருகிறது.


நமது சட்டசபையில் மக்களின் பிரச்சனைகளைக் குரல் கொடுத்து அவற்றை தீர்க்க வேண்டும் என்ற செயல்பாடு மாறிவிட்டது. அங்கே ஆளுங்கட்சியினரின் புகழாரம் மட்டுமே அரங்கேறிவருகிறது. எதிர்கட்சிகள் மக்கள் பிரச்சனைகளை வைத்து அரசியல் பண்ணுவதை விடுத்து, தத்தம் பிரச்சனைகளை முன்னிறுத்தி சேலை அவிழ்ப்புகளும், செருப்பு வீச்சுகளும், கைகலப்புகளும், சபைத் தலைவர் வணக்கம் கூறவில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்த தம் சேலையின் வண்ண பயன்பாடும் நம்மை முகஞ்சுளிக்க வைக்கிறது.


தம் கட்சி அரசாள வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு கொலைகுற்றவாளியுடன் கூட கூட்டு அரசியல் நடத்த எந்த கட்சியும் தயங்குவதில்லை. கூட்டணி பேரங்களும், குதிரை பேரங்களும் என்றோ நம் ஜனநாயகத்தின் முகத்தில் கரி அள்ளிப்பூசி கோரமாக மாற்றிவிட்டது. குறைந்த வருடங்களில் அதிகப் பணம் சம்பாதிக்கும் தொழிலாக நம் ஆட்சி பீடங்கள் அரிதாரம் பூசிக்கொண்டுள்ளன. நீதி மன்றங்கள் அரிதாகப் பேசும் நீதி மொழிகள் கூட இவர்களின் செவிகளில் செத்துவிடுகிறது. உச்சநீதி மன்றங்களின் தீர்ப்புகள் பல மாநிலங்களால் உதாசீனப்படுத்தப் படுகிறது. இதை தட்டிகேட்க நாதியில்லை நம்நாட்டில். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே கூரையின் கீழ் அந்த மாநிலமே சூறையாடப் படுகிறது.


நம் அரசுகள் விதித்துள்ள வரிகள் நம் பாட்டளிகளின் முகத்திலும் விலக்காகவில்லை. தேர்தல் சமயங்களில் மட்டும் மக்களின் தேவை எங்களின் சேவை. ஆட்சியிலமர்ந்த பிறகு மக்கள் எங்கள் தேவைக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமே அனைத்து கட்சிகளிடமும். தமிழகத்தின் கடன் மட்டும் 90,000 கோடி ரூபாய். அவை மக்களின் தேவைகளுக்கு வாங்கப்பட்டவையாம். இதில் இலவச கலர் டிவி திட்டமும் அடங்கும். எது மக்களின் அன்றாடத் தேவை என்பது தெரியாத மூளை உள்ளவர்கள் முதல்வர்களானால் இப்படியும் நடக்கும். நாம் எப்போதும் வரலாற்றை சிலாகித்து பேசுவதில் பெருமை கொண்டவர்கள். அதுபோலவே நம் வரலாற்றுத் தலைவர்களான காமராஜர், கக்கன் போன்றோரின் வரலாற்றை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். நம் எதிர்கால சந்ததிக்கு இது போன்ற நல்லவர்களின் வரலாறு கூட கிடைக்காது போய்விடும்போல் உள்ளது நம் இன்றைய நிலை.


காவல்துறையில் பெரும்பாலானோர் இந்த அரசியல் வியாதிகளுக்கு காவலாய் செயல்படவேண்டிய நிர்பந்தம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் தம் குடும்பத்திலிருந்து ஒருவன் அரசாண்டாலே அந்த பரம்பரை முழுவதும் ஆண்ட பரம்பரை ஆகிவிடும். ஆனால், மற்றவர்கள் ஆண்டி பரம்பரைக்கு தள்ளப்படுவார்கள். நம் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை விட, அது சார்பாக கொண்டாடப்படும் அரசு விழாக்களே செலவழிக்கப்படுகிறது என்பதை நம் மக்கள் அறிவார்களா? தம் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளுக்காகவே பல கால்வாய்கள் தூர்வாரப் படுகின்றன என்பதை யார் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டும்?


மரியாதைக்குரிய முனைவர். முன்னாள் குடியரசுத் தலைவர். அப்துல் கலாமின் 2020 கனவு நிறைவேறும் வழியிலா நாம் சென்று கொண்டிருக்கிறோம்? நம் நாட்டில் நம் பாரம்பரிய கலைகளை அழிந்துவிடா வண்ணம் காக்க சில பல்கலைகழகங்களில் குழுக்கள் செயல்படுகின்றன. ஆனால், விருதுகள் ஏனோ ஆடை அவிழ்பிற்கு மட்டும்.


நம் அரசியல் வியாதிகளின் மாறாத தேர்தல் அறிக்கைகளில் சில - 33 சதவீத இட ஒதுக்கீடு, நதி நீர் இணைப்புத் திட்டம். இவையெல்லாம் எப்போது நிறைவேறும்? விடை தெரியா பல கேள்விகளுடன் நம் மானுட வர்க்கம். இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் - எங்கே போகிறது நம் குடியரசு?

வந்தேமாதரம்!             வாழ்க ஜனநாயகம்!



Thursday, January 21, 2010

வழுக்கும் மொழியாய் திருநெல்வேலி வழக்குமொழி...

பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும்போது, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சார்ந்த சில நண்பர்கள் எனக்குண்டு. அவர்கள் பேசும் தமிழில் அந்த ஊர் அல்வா தரும் சுவை நான் பெற்றதுண்டு. தூத்துக்குடியில் மஸ்கோத்து அல்வாவும், மக்ரூனும் எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகைகள்.

காலேஜில பட்ட மேற்படிப்பின் மொத வகுப்புல, ஒவ்வொருத்தரா எந்தரிச்சு உங்க பேரு, நீங்க இதுக்கு முன்னாடி படிச்ச காலேஜு, எந்த ஊருன்னு சொல்லச் சொல்லி அறிமுக வகுப்பு நடத்துவாங்க... இத ஒரு வகுப்புல சொல்லி அறிமுகப்படுத்திகிட்டது பத்தாதுன்னு... சில வாத்திமாருங்க அந்த மொத நாலு பூராம் எல்லா வகுப்புலயும் சொல்லச் சொல்லி பொழுத ஒப்பேத்திருவாங்க.

அப்புடி ஒரு சமயத்துல ஒருத்தன் எந்திரிச்சு, எம் பேரு "முத்து", "சதக்", "திருநெல்வேலி"-னு சொல்லிட்டு உக்கார... ஏல மக்கா, இவன் என்னடே வந்த ஒடனையே "ச்சதக் ச்சதக்"-னு பீதியை கிளப்புதான். அவங்கிட்ட ச்சொல்லி "ச்சதக்"குங்கெறது காலேஜுன்னு ச்சொல்ல ச்சொல்லுலே. இங்க உள்ளவனுகளுக்கு "ச்சதக்" காலேஜு பேருன்னு தெரியாதுடே-னு ஒரு குரல். அந்த குரலுக்குச் சொந்தக்காரன் என் நண்பன். இவன் தூத்துக்குடியைச் சேர்ந்தவன். நாங்க எல்லாம் அதே காலேஜுல பட்டப் படிப்பு படிச்சதால அவங்கிட்ட மக்ரூன் வாங்கி வரச் சொல்லி தின்னு தீர்த்திடுவோம் அவன் காசையும். அப்பாடா... திருநெல்வேலி அல்வா திங்க ஒரு அடிமை சிக்கிட்டான்டானு மனசுக்குள்ள சந்தோசம் வேற.

தேர்வு காலங்கள்ல இவங்க அறைக்கு நான் படிக்கப் போகும்போது, இவர்களுது பேச்சே ரொம்ப சுவாரசியமா இருக்கும். சொல்லப் போனா அந்த மொழி மேல எனக்கு ஒரு காதலே உண்டு. போன உடனே, மாமா "ச்சாரம்" கட்டிட்டு வாங்க. நாம படிப்போம்-னு சொல்லுவாங்க. எனக்கு சிரிப்பா வரும். நான் திரும்ப, மாமா எங்க ஊர்ல பெரிய பெரிய கட்டிடத்துக்கு வெள்ளையடிக்க தான் சாரம் காட்டுவாங்க. படிக்கிறதுக்கு எதுக்கு மாமா சாரம்?-னு கேட்பேன். அதுக்கு அவங்க..."ஏடே, மாமா சோக்கு சொல்லுதுடே... எல்லாருஞ்சிரிங்க"-னு சொல்லி ஒரே அமர்க்களமா இருக்கும்.

ஏடே, நம்ம மாமா வந்திருக்குடே... நம்ம அண்ணாச்சி கடையிலே இட்லி சாப்புடுதாம்லே.

போடே அண்ணாச்சி கடையிலே ச்சரக்கு ச்சரியில்லடே. அவன் எங்க ச்சாமான் வாங்குதாம்னு தெரியலே.

விடுடே... விட்டா உள்ள எவ ச்சமைக்குதா... அவ மூஞ்சியப் பாக்கனும்னு நீ உள்ள புகுந்துருவ போலையே...

ஆமாடே... எதோ செத்த மூதிதான் ச்சமைக்கும்போல... அதான் செத்துப்போன மாதிரி இட்லிய கொடுக்காணுவ.

யய்யா... என்னா லாஜிக்குலே?? (என்று கூறியவாறு அவனை கிள்ளுகிறார்)

அதுக்கு ஏன்டே என்னைய முள்ளுதே? மாமா இவன நாலு சவட்டு சவட்டுங்க மாமா...

ஏலே நீ ரொம்பதாம்ல ஆடுத... முதுகுல மூச்சா போய்கிட்டு இருக்க அருவாளுக்கு வேலை குடுத்துடாதைலே...!

இதுக்குப் போயி ஏம்லே இப்புடி கோவிக்கே??

பின்ன என்னடே.... நீ இப்புடி பேசிப் பேசி எஞ்செவ்வி கிழிஞ்சுட்டு...

விடுடே... ரோட்டுல போறவன் எல்லாம் நம்மளையே பாக்கானுவ...

நம்ம பேசி விளையாண்டுட்டு போனா அவன் ஏன்டே நம்மள அப்படி பாக்கான்....??

பொறவு... அவனுக்கு வேலை இல்லையினா இப்புடித்தாண்டே பாப்பான்...

இப்படியே விளையாட்டு நீண்டுகொண்டு போகும் இந்த வழுக்கும் மொழியுடன்...

இந்த திருநெல்வேலி மொழியை நான் காதலிக்கக் காரணமான என் அன்பு நண்பர்கள் சதீஷ், முத்து, அமல், சில்வின், ரஜனி, சுபின், மணிகண்டன் மற்றும் சிவமுருகனுக்கு என் அன்பு நன்றிகள். :-)

பதிவுலகிலும் சிலர் இந்த திருநெல்வேலி வழக்கு மொழியில் எழுதும்போது நான் சிலாகித்துப் படிப்பதுண்டு. மரியாதைக்குரிய தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணனின் பேச்சையும் நான் கேட்க விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம். தொடருங்க மக்கா... நானும் மகிழ்கிறேன்.



Wednesday, January 20, 2010

அ(எ)ருமையாய் பிள்ளை வளர்க்கும் நாய்கள்

தலைப்பில் கடுங்கோபம் தெரிந்தால் என்னை மன்னிக்கவும்.

இப்பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் சம்பவம் உண்மை. எனவே இதில் வரும் வார்த்தைகளும், நிகழ்வுகளும் அப்படியே எடுத்துக் கூறப்பட்டுள்ளன.பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு பெரிய கலை. அதை நயமாக செய்து வருபவர்கள் பல நாயகர்/நாயகிகளை உருவாக்கி வருகின்றனர். பிள்ளை வளர்ப்பு பற்றி பல புத்தகங்கள் தமிழில் உண்டு. அதில் ஒன்றன் தலைப்பே மிக அற்புதமாக இருக்கும். அதன் தலைப்பு என்ன தெரியுமா? - "குழந்தைகள் வெள்ளைக் காகிதம் போன்றவர்கள். அவர்கள் கசங்கும் முன்பே எழுதிவிடுங்கள்".

 
எனது முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டது போல, குழந்தைகளுக்குப் பாசம் காட்டுங்கள். செல்லம் காட்டாதீர்கள். தொட்டதெற்கெல்லாம் தண்டித்து வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கண்டித்து வளர்ப்பது மிக மிக அவசியம். உங்கள் கண்டிப்பில் உறுதியாக இருங்கள். பிள்ளைகள் தவறும்போது அன்பாக திருத்த முயலலாம். ஆனால், அந்த அன்பினால், அந்த தவறுகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

 
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் பிள்ளை வளர்ப்பு நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்தது. இதைப் பகிர்வதால் பல பாதிப்புகள் தவிர்க்கப்படலாம் என்பதே என் நோக்கம். பல குடும்பங்களில் செய்யும் மற்றொரு மாபெரும் தவறு, தமக்கு தாமதாமாக குழந்தை பிறந்தது / ஒரே ஒரு ஆண் குழந்தை என்ற காரணத்திற்காக அவர்களை கண்டிப்பில்லாமல் வளர்ப்பது. இத்தகைய வளர்ப்பு முறைகள் அவர்கள் தவறான பாதையில் செல்லும்போது தடுக்காமல் போய்விடக்கூடும்.

 
நான் குறிப்பிட்ட அந்த குடும்பத்தில், தனது பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து வளர்த்து வருவதோடு மட்டுமல்லாமல், தவறான வார்த்தைகளை பிரயோகிக்கவும் பெற்றோர்களே மறைமுகமாகக் கற்றுக் கொடுத்தும், அனுமதித்தும் விடுகிறார்கள். பிள்ளைகள் ஏதாவது செய்யும்போது, அவர்களை "நீ ஒன்னாம் நம்பர் லூசு டா" / "நீ ஒரு stupid" என்றோ அந்த தாயும், தகப்பனும் சொல்லி விடுகிறார்கள். இப்போது அந்த குழந்தைகள் எந்த கணத்திலும் தன் தாய் தந்தையிடம் மேற்சொன்ன வார்த்தைகளைக் கூறத் தயங்குவதில்லை.

 
அதே போல, குழந்தைகளிடம் "உங்க அப்பன் ஒரு லூசு டா. அந்த ஆளு எப்போதும் இப்படித் தான் பண்ணுவாரு" / "உங்க ஆத்தா ஒரு அறிவுகெட்டவ" என்றோ சொல்லாதீர்கள். இப்படி பேசும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் தன் தாய் தந்தையருக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறிவிடுகிறார்கள். இது நான் காணும் அந்த குடும்பத்தில் தினமும் அரங்கேறுகிறது. இதன் விளைவாக தாயோ, தந்தையோ தன் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் "தம்பி, எனக்கு குடிக்க தண்ணி எடுத்துகிட்டு வா" போன்ற சிறு உதவிகள் கூட மிக எளிதாக மறுக்கப்படுகின்றன.

 
இப்போதெல்லாம், பிள்ளைகள் பெரும்பாலான நேரங்களை தொலைகாட்சியின் முன்பு செலவிட்டு, படிப்பில் கவனம் செலுத்த தவறுகின்றனர் என்ற விஷயம் வருத்தமளிக்கக்கூடியது. இந்த வீட்டு குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் தகப்பனார், திடீரென்று தெய்வ பக்தி/பயம் அதிகமாகி, பல மணி நேரங்களை பூஜை அறையில் கழித்து வருகிறார். அவர் பூஜை செய்யும் நேரம் நடக்கும் கூத்துகளை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. பூஜை செய்யும் போதெல்லாம் மணி அடித்துக்கொண்டு செய்வார். அவரது பிள்ளைகள் சத்தம்போட்டு விளையாடிக்கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ இருப்பார்கள். சில மணியாட்டல்கள்... சில ஜெபங்கள்... "டேய் எருமை, சத்தம் போடாம விளையாடு", மீண்டும் சில மணியாட்டல்கள்... சில ஜெபங்கள்... "டேய் நாயி, டிவி சவுண்டை கொறை" இவ்வாறு கூறிக்கொண்டே இருப்பார்.

 
இவர் திடீரென அக்கறை கொண்டு திட்டுவது போல இருக்கும். கொஞ்ச நேரம் கழித்து பிள்ளைகளை கட்டியணைத்து முத்தமிட்டு கொஞ்சி மகிழ்வார். இப்படி கண்ட கண்ட நேரங்களில் திட்டுவதைவிடுத்து, அவர்களுடன் ஓய்வாக இருக்கும் நேரத்தில், நல்ல புத்தி மதிகளை ஓரிருமுறை சொல்வது சிறந்தது என்பதை அவர் ஏனோ அறியவில்லை.

எவரேனும் இவரது குழந்தைகள் தவறுகள் செய்வதை சுட்டிக் காட்டினால், அவர்களை கண்டித்து திருத்த முயலாமல், "இவனுகளாவது பரவாயில்லை. இவனுக பெரியப்பா பசங்க எப்படியெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா" என்று அவரது பிள்ளைகளின் முன்னிலையிலேயே சில நிகழ்வுகளை சொல்லிக் கொண்டிருப்பார். இச்செயல் தம் பிள்ளைகளை மேலும் தவறான வழிகளுக்கு இழுத்துச் செல்லும் என்பதை அறியாத இவரை நினைத்து பரிதாபம்தான் படமுடிகிறது.

 
இதுபோன்ற பல காரணங்களால் இவரது பிள்ளைகள் படிப்பில் கவனம் சிதறி, குறைவான மதிப்பெண்களை எடுக்க ஆரம்பித்திருந்தனர். இவர்களது ஆசிரியை அந்த பசங்களிடம் ஏன் ஒழுங்காகப் படிக்கவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் மிகவும் நகைப்புக்குரியது. அது, "டீச்சர், எங்க அப்பா எப்போதும் சாமி கும்பிட்டுகிட்டே இருக்கதால, எங்களால படிக்க முடியலை(!?)". இந்தப் பெற்றோரும், பிள்ளைகளிடம் "உங்க ஆசிரியை என்ன சொன்னங்க" என்று கேட்பதற்கு பதிலாக, "உங்க ஆசிரியை என்ன சொன்னா?" என்று கேட்டால் எப்படி அவர்கள் பிறருக்கு மரியாதை தருவார்கள்?

கண்முன்னே இந்த வெள்ளைக் காகிதங்கள், வெற்றுக் குப்பைகளாய் கசக்கி எறியப்படுவதை பார்க்கும்போது நெஞ்சு தீப்பற்றிய பஞ்சாய்...



Saturday, January 16, 2010

உள்குத்து கவிதைகள் - 5

ஆர்ப்பாட்டம்
கொள்கை(ளை) கூட்டத் தலைவர்
கொடநாட்டில் கொட்டம்
அடுத்தவேளை மட்டும்
அன்னதானத்திற்கு உத்திரவாதமளித்த
அமைச்சர் பெருமக்களுடன்
ஆயிரக் கணக்கானோர்
ஆங்காங்கே ஆர்ப்பாட்டம்!



முன்பதிவு
விருந்தினர் வருவதையறிந்து
அவருக்கு முன் விரைந்து
வெளிமுற்றத்திலமர்ந்து
மிஞ்சும் சோற்றுக்கு - கரைந்து
முன்பதிவு செய்கிறது...
காகம்!



கடை(ட்)சித் தொண்டர்
செயலற்ற தலைவர்
கட்சிக்கும், நாட்டுக்கும்
செய்யவில்லை ஒன்றும்...
ஏதோ மாநாடாம்
அழைக்கிறார்...
அலைகடலென திரண்டு வாரீர்
கழகச் "செயல்" வீரர்களே!



இளசுகள்
அங்கே தீ விபத்தாம்
ஓடி அணைக்கத் தோன்றவில்லை!
இங்கே மழைச் சாரல்
ஓரமாய் அணைத்துக்கொண்டே
இருக்கத் தோன்றுகிறது
காதலியின் அருகாமை...



Monday, January 11, 2010

தெரிந்துகொள்வோம் - 6

*&* நேப்பாள வீரர் "ஆக்ரிட்டா ஷெர்பா" என்பவர் பத்து முறை எவரெஸ்ட்டை அடைந்ததால், அவருக்கு "பனிச் சிறுத்தை மனிதன்" என்ற சிறப்பு பட்டம் உண்டு.

*&* தேசியக் கொடியில் "ஆலமரம்" இடம்பெற்றுள்ள நாடு லெபனான்.


*&* மாட்டுச்சாண எரிபொருளில் உள்ள முக்கியமான வாயு "மீத்தேன்".

*&* முயலின் உடலில் அபாய அறிவிப்புக் கொடுக்கும் பகுதி வால்.

*&* முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் ஆண் இன மீன் "கடல் குதிரை".


*&* பாங்க ஆஃப் இங்கிலாந்து 1804-ம் ஆண்டு முதல் 1806-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் டாலர்களான வெள்ளி டாலர் நாணயங்களை கொள்ளுப் பட்டறையால் அடித்து வெளியிட்டது.

*&* விண்வெளியில் ஆறுமுறை பயணித்த பெருமை "கேப்டன் ஜான் வாட்ஸ் எங்" என்ற அமெரிக்கருக்கு உண்டு.

*&* சயாமிய மொழியில் "நான்" என்ற சொல்லை ஒன்பது விதமான சொற்களால் வெளிப்படுத்தலாம். உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு இல்லை.

*&* 13 நாட்டு எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா.

*&* உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்ஸிகோ வளைகுடா.

*&* நீர் பனிக்கட்டியாக உறையும்போது அதன் பரிமாணம் அதிகமாகும்.

*&* அமெரிக்காவின் கொடி "ஓல்டு குளோரி" எனப்படுகிறது.


*&* "அமாரிக்" எத்தியோப்பியாவில் பேசப்படும் மொழி.

*&* மூங்கிலில் சுமார் 500 வகைகள் உள்ளன.

*&* குரங்குகளுக்குப் பல வகையான நிறங்களைப் பிரித்தறியும் ஆற்றல் உண்டு.

*&* முப்பதாம் வருட விழாவை ஆங்கிலத்தில் "பெர்ல் ஜூப்ளி" என்று அழைப்பார்கள்.

*&* பிச்சைக்காரர்களுக்கு பென்ஷன் வழங்கிய நாடு - இலங்கை.

*&* சீக்கியர்களின் கடைசி குரு - "குரு கோவிந்த் சிங்".

*&* "சகாரா" 35 லட்சம் சதுர மைல் பரப்பில் உள்ளது.

*&* சந்திரனைப் போன்று வீனஸ் கோளுக்கும் பிறைகள் உண்டு.

*&* பாலில் இல்லாத சத்து "இரும்புச்சத்து".

*&* நமது நாட்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கும் மையம் "டோராடூன்" என்ற இடத்தில் உள்ளது.

*&* நமது இந்திய நேரம் "அலகாபாத்" என்ற இடத்தின் நேரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.






Sunday, January 10, 2010

கோத்தா திங்கியில் கொட்டமடித்த மங்கிகள்...


பொறுப்பி-1 - இது சிங்கைப் பதிவர்கள் சிலரின் மலேசிய இன்பச் சுற்றுலா.

பொறுப்பி-2 - நாங்கள் அங்கு கண்ட நம் முன்னோர்களான குரங்குகளைப் பற்றி இந்தப் பதிவில் ஒரு வரியே சொல்ல முடிந்த வருத்தத்தாலும்... நம் முன்னோர்களை சிறப்பிக்கும் வகையிலும் மட்டுமே இந்த தலைப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்பி-3 - இச்சுற்றுலாவில் கலந்து இன்பம் பெற்ற அன்பு பதிவர்களுக்கும்... இந்த இடுகையின் தலைப்பிற்கும் நேரடி சம்பந்தமில்லை (முன்னோர்களுடனான சம்பந்தம் தவிர) .

பக்கத்துல உள்ள நாடுகளை சடுகுடு விளையாட்டுல கோட்டைத் தொடுற மாதிரி குடுகுடுன்னு போயி பார்க்க முடியுங்கிறது தான் சிங்கையில் உள்ளவங்களுக்கு உள்ள ஒரு பெரிய கொடுப்பினை. அப்புடித் தாங்க நம்ம சிங்கைப் பதிவர்களில் நான்(ரோஸ்விக்), வெற்றி கதிரவன், ஜெகதீசன், அப்பாவி முரு மற்றும் சென்னையிலிருந்து வந்திருந்த அவரது நண்பர் பிரேம் குமார் அனைவரும் மலேசியாவில் உள்ள கோத்தா திங்கி (Kotta Tinggi)-க்குப் போனோம். யாருணே திட்டுறது... அந்த ஊருப் பேரை தமிழ்ல அப்படித் தான் எழுதீருந்தாங்க. இந்த சுற்றுலா மிகக் குறைந்த செலவில்(ஏறத்தாழ S$20), அதிக அலைச்சல் இல்லாமல் மிகவும் இன்பம் தரும் வகையில் இருந்துச்சு.

காலையில 9 மணிக்கு சிங்கப்பூர் Woodlands Interchange-ல இருந்து டவுன் பஸ்சுல மலேசியாவுக்குக் கிளம்புனோம். எங்கே காலச் சாப்பாடுக்கு நம்மள அலையவிட்டுருவானுகலோனு மூணு சுவையில பன்னு வாங்கிட்டுப் போனேன். கடைசியா நமக்கு பன்னு கொடுத்துட்டாய்ங்க... மலேசியா எல்லையில உள்ள ஜோகூர் பாரு (Johar Bharu) போயி சேர்ந்தவுடனே, ஏல மக்கா நேரம் ஆச்சு வாங்க சீக்கிரமா கோத்தா திங்கிக்குப் போகலாம்னு சொன்னேன். ங்கொக்கா மக்கா நான் ஜோகூர் வந்துருக்குறதே திங்கிறதுக்குத் தான். எவனாவது சீக்கிரம் கிளம்புன்னு சொன்னீங்க, அப்புறம் மத்தியான சாப்படு வரைக்கும் இங்கே இழுத்துக் கடத்திருவேன்னு ஞானப் பித்தன்கிட்ட இருந்து மிரட்டல் வந்தது.

நான் பல முறை மலேசியா போயிருந்தாலும், இந்த ஊருக்கு இது தான் முதல் முறை. இறங்கி ரெண்டு வீதி தாண்டிப் போனா ஏதோ நம்ம மதுரை பக்கம் நுழைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங்கு... ஒரு கோயிலு, நிறைய பூக்கடை, சாம்பிராணி, ஊதுபத்தி இன்னும் பல பூஜை சாமான்கள் விக்கிற கடை நிறைய இருந்தது. பத்தடிக்கு ஒரு கைரேகை, ஜோசியம் பாக்குற நம்ம ஆளுக. பாவம்ணே உங்களுக்கு நல்ல காலம் வருது, உங்க வாழ்கையில பெரிய முன்னேற்றம் ஏற்படப் போகுதுன்னு எல்லோருக்கும் சொல்லிவிட்டு... அவங்க மட்டும் இன்னும் ஒரு ஒட்டுத் துணிய விரிச்சுகிட்டு பிளாட் ஃபார்ம்ல உக்காந்து இருக்காங்க.

அஞ்சு பேரும் ஒரு சாப்பாட்டுக் கடைக்குள்ள புகுந்து, சாப்பிட்டிட்டு வெளிய வரும்போது, யானை புகுந்த கரும்புத் தோட்டம் மாதிரி அந்த ஹோட்டல் இருந்துச்சு... இவ்வளவு சாப்பிட்டும் கடைசியா பில்லு சும்மா RM. 24 (மலேசியா ரிங்கிட்டு) (சிங்கை வெள்ளி 10) தான் வந்துச்சு. அப்புடியே ஓடிப் போயி ஒரு பஸ்ஸைப் பிடிச்சு 45 நிமிடப் பயணத்துல கோத்தா திங்கி நகரை அடைந்தோம். போற வழி முழுவதும் பல ஏற்ற இறக்கங்கள் மற்றும் வலைவுகளுடனான பச்சைபசேல்-னு மரம் செடிகள். மிக அருமை. பெரும்பாலான மலாய்காரங்களுக்கு, ஆங்கிலம் அதிகம் தெரியாதுண்ணே. எவ்வளவு பஸ் டிக்கெட்டுன்னு கேட்டா மலாய்ல பதில் சொல்ல... நாங்க திணறிபோயி கடைசியா கால்குலேட்டர்தான் உதவுச்சு...

ம்ம்ம்... சொல்லவே இல்லையே... கோத்தா திங்கில ஒரு அருவி இருக்கு. அதுல போயி குளிச்சு ஆட்டம் போட்டு வரத்தான் இந்த பயணம். நகர் பகுதியில இருந்து அருவி இருக்கிற இடத்துக்கு 15 நிமிடம் கார்ல போகணும். இரண்டு தமிழ் பேசும் இந்திய வம்சாவளி ஓட்டுனர்களின் காரை வாடகைக்கு எடுத்து சென்றோம். அங்கயும் பேரம் பேசணும்ணே... அந்த அருவி இருக்கிற இடத்துக்கு நுழைவாயில் கட்டணமும் உண்டு(RM. 10). கண்ணில் படும்படியா எங்கள் உடை மற்றும் நொறுக்குத் தீனி பைகளை வைத்துவிட்டு நங்கு நங்குன்னு கொட்டும் அருவியில குளித்து ஆட்டம் போட்டோம். அப்பத் தானே நம்ம முன்னோர்கள் நம்மள சந்திக்க வந்தாங்க... தாவித் தாவி வயித்துல ஒரு குட்டியையும் தூக்கிகிட்டு இது போன்ற உணவு பைகளை குறி வைத்து அவய்ங்க போட்ட ஆட்டம் தாங்கலண்ணே... (அப்பாடா தலைப்பு வச்சதுக்கு ஒரு காரணம் சொல்லியாச்சு...)


ஆசை தீர ஆட்டம் போட்டுட்டு... அருவியின் மேல் பகுதிக்கு போனோம்னே. அங்க போனா நமக்கு முன்னாடி ஒரு பெரிய கூட்டமே, நீச்சல் குளம் போல இருக்கிற பகுதிகள்ல நீந்தி விளையாடிகிட்டு இருந்தாங்க. அப்பத்தானே புரிஞ்சது கீழ குளிக்கும்போது எதுக்கு நமக்கு குளிரலைன்னு... அங்க ஒரு பெரிய அருவி இருந்தது. ஆனால் அதன் அடிப் பகுதியின் ஆழம் அதிகம் என்பதால் அங்கு குளிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. நாங்களும் நல்ல நீந்தி குளிச்சோம்ணே... அங்க இருந்த மீன் குஞ்சுகள் இலவசமாவே எங்கள் பாதங்களுக்கு மசாஜ் பண்ணி விட்டுச்சுண்ணே. கால்ல இருந்த அழுக்கு பூராம் போயிடுச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டோம்... அப்பாடா இன்னும் ஒரு மாசத்துக்கு குனிஞ்சு குளிக்க வேண்டிய அவசியம் இல்லன்னு... :-))











அந்த அருவி அழகோட போட்டோ எடுக்கனும்னு கல்யாண உடைகளோட சில தம்பதிகள் வந்திருந்தாங்கண்ணே. சில வெளிநாட்டு தேனிலவு ஜோடிகளும் இருந்தாங்க... எப்படி கட்டி புடிச்சுகிட்டே நீச்சல் அடிக்கிறதுன்னு அவங்க நாடுகள்ல சிறப்பு பயிற்சி பட்டறைகள் நடைபெறுகிறதுன்னு நினைக்கிறேன்ண்ணே. அப்படி நம்ம நாட்டுல எதுவும் பயிற்சி பட்டறைகள் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்கண்ணே... நம்ம இளம் பதிவர்களுக்கு உதவியா இருக்கும். :-)










திரும்ப ஜோகூர் பாரு வந்து மாலை 4.30 மணியளவில் மதிய உணவு என்ற பேரில் மிகுந்த சுவையுடன் இருந்ததால சில பல கொத்து பரோட்டாகளையும், புட்டு வகைகளையும் வயிற்றுக்குள் அமுக்கி (வயிறாரனு சொல்ல முடியாது... ஏன்னா வயிறு அழும் அளவுக்கு) திரும்ப சிங்கை வந்து சேர்ந்தோம். இந்த ஊரு ஹோட்டல்கள்ல சாப்பாட்டு அயிட்டம் சொன்ன உடனே... தண்ணி எதுவும் சொல்லீட்டிங்களானு கேட்டாங்க. எனக்கு ஒன்னும் புரியல. அண்ணன் முரு தயவால காப்பி, பால் இவற்றை இங்கு பொதுவா தண்ணின்னு சொல்லுவாங்கனு புரிஞ்சுகிட்டேன். அவற்றை குடிச்சதுக்கப்புறம் முழுவதும் புரிஞ்சுகிட்டேன். :-) அங்க உள்ள தியேட்டர்ல போயி Avatar படம் 3D-ல பாக்கலாம்னு... தியேட்டர்ல இருந்த பொண்ணுகிட்ட அண்ணன் முரு போயி இந்தப் படம் பார்க்க கண்ணாடி தருவீங்களானு கேட்க... நாங்க அந்த பொண்ணு போட்டிருந்த கண்ணாடியத்தான் கேட்டமோனு நினச்சு ஹா...ஹா..னு சிரிச்சிட்டு.... நீங்க வேணும்னா வேட்டைக்காரன் பாருங்கன்னு சொல்ல... உன் 3D-யும் வேணாம் ஒன்னும் வேணாம் போ-D -னு தலை தெறிக்க ஓடி வந்துட்டோம்.

வாய்ப்பு அமைஞ்சா நண்பர்கள் கூட்டத்தோட இந்த இடத்துக்குப் போயி சந்தோசமா கும்மி அடிச்சிட்டு வாங்கண்ணே. உடல் அழுக்கு மட்டுமல்ல... மனக்கசடுகளும் போன மாதிரி இருக்கும்.



Thursday, January 7, 2010

இந்த ஏர்செல்காரன் அட்டூழியம் தாங்கலையப்பா...

ஒரு காலத்துல மொபைல் சேவை வழங்குவதில் BPL நிறுவனம் முன்னணியில் இருந்தது. அப்பவெல்லாம், நமக்கு அழைப்புகள் வந்தாக்கூட அதற்கும் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படும். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், பழைய தொலைபேசி சந்தா முறைகளைப் போல, மாதம் குறைந்தபட்சம் இவ்வளவு கட்டாயக் கட்டணம், அதற்குமேல் நீங்கள் தொடுக்கும் அழைப்புகளுக்கும், எடுக்கும் அழைப்புகளுக்கும் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்.

அப்போ இருந்த மொபைல்களுக்கெல்லாம் கொம்பு மாதிரி ஒரு பக்கம் மட்டும் ஆண்டனா நீட்டிகிட்டு இருக்கும். அதோட கனம் மட்டும் கால் கிலோவுக்கு மேல இருக்கும். இவ்வளவு பெரிய கனத்தையும் சட்டைப் பையில்தான் போட்டுக்கிட்டு நம்ம ஆளுக அலப்பறையக் கொடுப்பாங்க. அந்த ஆண்டனா கம்பி சட்டைக்கு வெளில தெரிஞ்சாத் தான் நம்மகிட்டயும் மொபைல் இருக்குனு நம்புவாங்க... இந்த சிம் கார்டு எல்லாம் இப்போ வாங்குற மாதிரி பொட்டி கடையில எல்லாம் வாங்க முடியாது. அவங்க அலுவலகத்துக்கு நேரடியா போயி, சிவப்பு சிவப்பா அழகா அங்க உங்காந்து இருக்குற புள்ளைக்கிட்ட நம்ம மொபைல குடுத்து, நீங்களே கழட்டி, சிம் கார்டை போட்டு செட் பண்ணி கொடுத்துருங்கன்னு ஒரு கூட்டமே காத்துகிடக்கும். அதுல அந்த புள்ளைகளையும் எப்படியாவது செட் பண்ணிரலாம்னு ஒரு கூட்டம் அடிக்கடி அங்க போகும்.

அந்த புள்ளைக அதுக்கு மேல... அந்த மொபைல் சேவை தருகிற கம்பெனியே அவங்கோட்டு மாதிரி ரொம்ப பிகு பண்ணுவாளுக. 1999 & 2000 -வது ஆண்டுகள்ல இந்த BPL நிறுவனத்துக்குப் போட்டியா Aircel நிறுவனம் களம் இறங்குச்சு. எங்க டவரு தமிழகத்துல 90 இடத்துல இருக்கு. அதுனால எந்த ஒரு பெரிய நகரத்துக்கு நீங்க போனாலும் எங்க டவரு கவரு ஆகும்னு அதிரடியா விளம்பரம் பண்ணினாங்க. என் நண்பர் ஒருத்தரு இந்த நிறுவனத்துல, மொபைல் சேவை வழங்குகிற பிரதிநிதியா வேலைக்கு சேர்ந்தாரு. அவருக்குப் பிரதி பிரதியா நிதி வந்துச்சோ இல்லையோ... அந்த ஏரியா முழுக்க அவருக்கு மவுசு கூடிருச்சு.

எவன் எவன் புதுசா மொபைல் வாங்கினானோ... அவன் மொபைல்ல நேரம் செட் பண்ணக்கூட இவருகிட்ட வருவாங்க... என் நண்பருக்கும் அவ்வளவா தெரியாது... எவன் எத கேட்டாலும், அண்ணே! நாளைக்கு ஆபீஸ்-க்கு வாங்க. சரி பண்ணிடலாம்னு... நிறுவன எம்.டி கணக்கா சொல்லிடுவாரு. கொஞ்ச நாள் கழிச்சு அந்த நண்பருக்கு அவரது நிறுவனமே ஒரு மொபைல கையில குடுத்துருச்சு.... அவரு அலும்பு தாங்கல... எவென் புதுசா கணைக்க்ஷன் வாங்குனாலும், அவனுக்கு அடுத்த நாள் போன் பண்ணி அண்ணே... உங்க நம்பரு ஆக்டிவேட்டு ஆயிடுச்சு. எதாவது பிரச்சனைனா எங்கிட்ட சொல்லுங்கன்னு... என்னமோ அந்த ஏரியா ரௌடி மாதிரி சொல்லுவாரு.

மற்ற நண்பர்கள் முன்னாடி இவரு எப்போதும் பிசியா இருக்குறமாதிரி செவாலியே அளவுக்கு நடிச்சுகிட்டு இருப்பாரு. இவருக்கு அவுட்கோயிங் ஃப்ரீன்னு காட்டுறதுக்காக... யாரு மொபைலுக்காவது கூப்பிட்டு, அண்ணே! எங்கே இருக்கிக-ன்னு கேப்பாரு. தப்பித் தவறி எதிர் பார்ட்டி... சொல்லுங்க நான் வீட்டுல தான் இருக்கேன்னு சொல்லிட்டா போதும்... இவரு கொஞ்சம் அதட்டலா... என்னாண்ணே! மொபைல வச்சுகிட்டு வீட்டுல இருக்கீகன்னு ஒரு பிட்டைப் போட்டு அவரை ஒட்டுமொத்தமா வீட்டை விட்டு விரட்டவோ அல்லது அவராகவே தெருவுக்கு வரவோ பெரும் முயற்சியை பண்ணிக்கிட்டு இருப்பாரு.

ஏரியா-ல யாரை பார்த்தாலும் வணக்கம்... கை குலுக்கல்... அப்பப்பா... தாங்கமுடியல. அப்படித் தான் ஒரு நாளு நம்ம ஆளு திருச்சி மெயின்காட்கேட்டுல இருந்து உறையூர் பக்கமா வண்டில போயிகிட்டு இருந்தாரு. எதுத்தாப்புல ஒருத்தரு, உறையூர் பக்கமா இருந்து அவரு வண்டில வந்துகிட்டு இருந்தாரு... அவரு வலதுபக்கமாத் திரும்பி தில்லைநகர் ஆர்ச்சுக்குள்ள போறதுக்காக, இண்டிகேட்டர் போடாம... வலது கையை நீட்டிகிட்டே வந்தாரு... நம்ம மொபைலு ஆப்பீசரு பழக்க தோஷத்துல... நமக்கு தான் கை கொடுக்க வர்றாருன்னு நினச்சு... வண்டிய ஸ்லோ பண்ணி அந்த ஆளு கையை எட்டி புடிக்க... அவரு நடு ரோட்டுல பப்பரப்பேன்னு விழுந்துட்டாரு.

நானும் சில நண்பர்களும் வேற வேற வண்டிகள்ள வந்துகிட்டு இருந்தவய்ங்க போயி விழுந்த ஆளை தூக்கிவிட்டோம். அவரு எங்க நண்பரை விட்ட டோசு... இன்னும் எங்க காதுக்குள்ள இருக்குதுன்னா பாருங்களே. நண்பர்கிட்ட ஏன்யா இப்படி செஞ்சே-னு காரணம் கேட்டதும்... அவரும் வெள்ளந்தியா அந்த காரணத்த சொல்ல... வயிறு வலிக்க நடு ரோட்டுல சிரிக்க வேண்டியதாப் போச்சு...

இதைப் போயி நம்ம கூட்டளிக ஏரியா-வுல சொல்ல... இன்னைக்கும் அவர் என்ன பண்ணினாலும் "இந்த ஏர்செல்காரன் அட்டூழியம் தாங்கலையப்பா"-னு சொல்றாங்க. ச்சே! வாங்குற சம்பளத்துக்கு எப்படியெல்லாம் நிர்வாகத்துக்கு பேர சம்பாதிச்சுக் கொடுக்குரானுகப்பா...


Monday, January 4, 2010

தள்ளிப்போகும் திருமணங்கள் யாராலே?-2

இதன் பகுதி-1 மிகுந்த ஆதரவளித்த அன்பர்களுக்கு மிக்க நன்றி.
படிப்பு என்பதும் செட்டில் ஆகவேண்டும் என்பதும் ஓரிரு வருடங்களில் நிறைந்துவிடுவது அல்ல. அது ஆயுள் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் ஒரு வழக்கு. அதை திருமணத்திற்கு பிறகும் தொடரலாம். :-)


பொதுவாகவே இந்திய முழுவதும் ஆண்களை விட பெண்கள் மிகக் குறைவாகத்தான் உள்ளனர். இருப்பினும் இப்போது நாம் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அல்லாடும் அளவிற்கு அல்ல. முன்பு சமுதாய அமைப்புகளில் குடும்பங்கள் தன் ஜாதி சொந்த பந்தங்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளில் இருந்தனர். இன்று தொலை தொடர்பு சாதனங்கள் பெருகி இருந்தாலும், சொந்த பந்த தொடர்புகள் குறைந்து தான் உள்ளனர். பணக்காரனாக வேண்டும் என்ற பந்தயத்தில், பந்தங்களை இழந்துகொண்டிருக்கிறோம். மனை மட்டும் பெரிதாகி மனங்கள் சிறுத்து போகி விட்டன.


இந்த பந்தங்களின் இடைவெளியை குறைக்க பல மேட்ரிமோனியல் இணையதளங்கள் உதவினாலும்.... இதன் பயன்பாடு அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேரவில்லை. இதன் சில பாதகங்களால், பலரும் பயன்படுத்தவும் தயங்குகின்றனர். தரகர்களின் வாய் ஜாலங்களுக்கு பயந்தும் சிலர் திருமண நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடியாமல் தடுமாறுகின்றனர்.


ஜாதகம் சரியில்லை என்றோ, பொருத்தம் அமையவில்லை என்றோ, தோஷம் இருக்கிறது என்றோ கூறி பலரை முதிர் கன்னிகளாக ஆக்கிவைத்திருக்கும் நம் மத அமைப்புகளை என்னவென்று கூறுவது? இன்றைய இளைஞர்களில் பலருக்கும் இந்த ஜாதக அமைப்புகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், பெற்றோர்கள் மனம் புண்படக்கூடாது என்றும்... சமுதாயத்தின்(சம்பந்திகளின்) வற்புறுத்தலுக்காகவும் தங்கள் திருமண நாளை தள்ளிபோட்டுகொண்டு புளுங்குகிரார்கள். இது அவசியமா என்று பலரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த வரிகளை நான் யாரையும் புண்படுத்த எழுதவில்லை. ஆணை பெண்ணுக்கும், பெண்ணை ஆணுக்கும் பிடித்து, குடுபத்தினர்கள் அனைவரும் திருப்தியாக இருந்தாலும், இந்த ஜாதகப் பொருத்தம் என்ற பொருத்தமில்லாத காரணத்தை கூறி அவர்களை முதிர்கன்னிகளாக/கணவான்களாக வாட்டிவதைப்பது சரியா?


பலரும் தங்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை சரியாக அறியாமல் வரண் தேடுவதும், தாங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் குடும்ப அமைப்பு, அறிவு, படிப்பு, அழகு போன்றவற்றை முறையாக வரிசைப்படுத்தத்(Priorities) தெரியாமல் அனைத்திலும் முதன்மையான ஒரு (Ideal) துணையை தேடுவதும் சாத்தியத்தை, சாதனை அளவுக்கு உயர்த்திவிடுகிறது.
எதிர்ப்புகளில் மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளிலும் வளைந்துகொடுக்கும்(Flexibility) தன்மையுடன் இருந்தால், சூழ்நிலைகளை கையாளுவது மிக எளிதாக இருக்கும். முடிந்தவரை எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். திரைநட்சத்திர அழகிகளை திருமண பந்தத்தில் எதிர்பார்க்காதீர்கள். குறை சொல்ல முடியாத (முகத்) தோற்றம் இருந்தால் போதும் என தேடுங்கள்.


இப்ப என்ன அவசரம்... மெதுவா பண்ணிக்கலாம் என்று அலட்சியப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்கவோ, உங்கள் தாயின் நோய்க்கு சிகிச்சை அளிக்கவோ அலட்சியம் செய்வீர்களா?? இதுவும் அது போன்றது தான் என எண்ணுவதில் என்ன தவறு இருக்கக்கூடும்? நான் இங்கு திருமண பந்தத்தில் உடன்படாதவர்களுக்கு சொல்லவில்லை. திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமே இது.


இன்னும் பலர் காதல் தோல்வி எனும் காரணம் சொல்லக்கூடும். அது தான் முடிவு தெரிந்து விட்டதே. இன்னும் என்ன தயக்கம்?? காதலில் தோற்றால் வாழ்வில் ஜெயிக்கக் கூடாதா?? காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. அது உங்களை விட்டு நீங்கியும் போகக்கூடும்... உங்கள் உள்ளேயே நீர்த்தும் போகக்கூடும். தோற்ற காதலுக்குப் பிறகு வரும் திருமண உறவை, உங்கள் காதலை வெளிப்படுத்தி வாழ்க்கையில் ஜெயிக்க கிடைத்த வாய்ப்பாக ஏன் எண்ணக்கூடாது?


இங்கு நம்மில் பலர் வாழ்கை துணையை தேடுவதை விடுத்து... சில நிறுவனங்கள் தேடுவது போல் (searching good resource with high salary) செய்து கொண்டிருக்கிறோம்.... இதுவும் திருமணம் தள்ளிப்போவதில் முக்கிய காரணம். இன்னும் சில வீடுகளில் வரன் பற்றிய போதிய விபரங்களை அறிந்துகொள்ளும் முயற்சியாக, நேர்முகத் தேர்வு போல் நடத்திக்கொள்கிறார்கள். சில அறிவு ஜீவி அண்ணன்கள் வரனின் பணி சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப விபரங்களையும் கேட்டுத் தொலைக்கிறார்கள்.



வாழ்கையை திட்டமிடுங்கள் உங்கள் திருமணத்தோடும் சேர்த்தே.... வாழத்தானே வாழ்கை! வீழ்வதற்கு இல்லை!!



Sunday, January 3, 2010

தள்ளிப்போகும் திருமணங்கள் யாராலே?

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று ஒரு வழக்கு தமிழில் உண்டு. உண்மைதான். ஒரு திருமணம் என்பது அந்த தலைமுறையோடு முடிந்துவிடுவதல்ல... தம்பதியரின் வளர்ப்புமுறை மற்றும் உயிர் ஜீன்களின் வழியாக, இந்த பந்தமும், பாரம்பரியமும் பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுகிறது. இந்த பயிரில் பூச்சிகள் விழ ஆரம்பித்திருப்பது மிக வருத்தமான விஷயம் தான்.

பழங்காலத்தில் குழந்தை திருமணம் நடைமுறையில் இருந்தது. இது மிகத் தவறான ஒரு வழக்கம். அதில் எந்த ஐயமுமில்லை. அதற்குப் பிறகு பெரும்பாலான குடும்பங்களில் தனது மகனுக்கோ, மகளுக்கோ அரசு நிர்ணயித்த வயதிற்காக காத்திருந்து... அந்த வயது வந்தவுடன் திருமணம் நடத்தி வந்தனர்.

அனால் இன்று, பல்வேறு காரணங்களால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் மிகத் தாமதமாக நடை பெறுகிறது. இந்த காரணங்களை ஆராய்ந்து களைய முடிந்தவற்றை களைந்து புறந்தள்ளுவது அவசியம் என்பதை நாம் உணரவேண்டும். இந்த காரணங்கள் அனைத்தும் நாமே உருவாக்கிக்கொண்டு... நம் சந்ததிகளின் வாழ்விற்கு நாம் போட்ட முட்டுக்கட்டை என்றால் மிகையாகது.

திருமணங்கள் தாமதமாவதற்கான காரணங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம். பெரும்பாலான குடும்பங்களில் ஏன் தங்களின் மகனுக்கு / மகளுக்கு இன்னும் திருமணம் முடிக்கவில்லை என்று கேட்டால், அதிர்ச்சியான பல காரணங்கள் வரும். சில இடங்களில் மிகக் குறைந்த வயது இடைவெளியில் தங்கை இருப்பதால், அவளுக்கு திருமணம் முடித்த பிறகு... நாம் திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்று பொறுத்திருக்கும் அண்ணன்களும் உண்டு. இது சரியான கருத்தும் கூட.

"எம் மக இன்னும் படிக்கணுங்கிறா", "எம் மயன் நல்லா செட்டிலாயிட்டு அப்பறம் பண்ணிக்கிரேங்கிறான்", "ஜாதகப் பொருத்தம் அமையல", "பொண்ணு கிடைக்க மாட்டேங்குது", "நம்ம தகுதிக்கு பொண்ணு கிடைக்கல", "நாம எதிர் பாக்குற ஒன்னு இருந்தா, இன்னொன்னு இருக்க மாட்டேங்குது", - என்று பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போவார்கள்.

இன்னும் சில வேடிக்கையான காரணங்கள் கூட உண்டு. என் நண்பன் ஒருவன் ஜெர்மனியில் இருக்கிறான். திருமணம் செய்து அந்த பெண்ணை ஜெர்மனிக்கு அழைத்து கொண்டு செல்ல வேண்டும். அந்த பெண்ணுக்கு ஜெர்மன் தெரிந்திருந்தால் சிறப்பாக இருக்கும். அதற்காக, ஜெர்மன் தெரிந்த பெண்ணாகவோ அல்லது ஜெர்மன் மொழி படிக்க ஆர்வமுள்ள பெண்ணாகவோ வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறான். இந்த நிபந்தனையோடு, வழக்கில் உள்ள நிறம், உடல் அளவு, அழகு, ஜாதி, மத, படிப்பு, அந்தஸ்து நிபந்தனைகளும் உண்டு... இதை படிக்கும்போது உதட்டோரம் சிரிப்பு வந்தாலும், உள்ளத்தில் நொந்தவர்கள் என்னை போல் பலராக இருக்கக்கூடும்.

இதில் பெரும்பாலான காரணங்களுக்கு பெற்றோரும், நாம் சார்ந்த இந்த சமுதாயமும் தான் காரணம். நாம் செட்டில் ஆவது என்று எதை அவர்களுக்கு கர்ப்பித்திருக்கிறோம்? இந்த செட்டில் ஆவது என்பது, நாம் ஏற்கனவே கொண்டுள்ள, அர்த்தமிலாத / அர்த்தம் பல கொண்ட "சும்மா" என்ற வார்த்தையை போல் இதுவும் ஒன்றே. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய நகரத்தில் பெரிய அளவிலான வீடு வேண்டும், நிரந்தரமான வேலை வேண்டும், திருமணத்திற்கு முன்பே சொகுசு கார் வாங்க வேண்டும், வெளி நாடுகளில் பணிபுரிய வேண்டும்....என்று பல வேண்டும்கள் இந்த டும்.. டும்... டும்-மை தள்ளிப்போட்டுகொண்டே போகின்றன.

வாழ்கையில் இவற்றை பெற வேண்டும் என்ற ஆவல் இருப்பதில் தவறில்லை. ஆனால், வாழ்கையை தொலைத்துவிட்டு இவற்றை மட்டுமே தேடிகொண்டிருப்பதில் என்ன இலாபம்? இதே போல் தான் இன்னும் படிக்க வேண்டும் என்பவருக்கும்... நான் இந்த டிகிரி படித்தேன், அந்த டிகிரி படித்தேன் என்று காலம் காலமாக ஏட்டு சுரைக்காய்களாக, உலகப் பொருளாதாரம், கொயஸ் தியரி, பேயஸ் தியரி என தியரிகளை மட்டுமே படித்துவிட்டு, குழந்தை வளர்ப்பு பற்றியும், குடும்ப நலம் பற்றியும், இனிமையான தாம்பத்தியம் பற்றியும் அறியாமல் இருப்பவர்களையும் நாம் என்ன சொல்வது?

படியுங்கள்.... வேண்டாம் என்பது என் கருத்து அல்ல. எதை நோக்கி நம் வாழ்வை செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து படியுங்கள். பெற்றோருக்கு பாரமாகவோ , உடன் பிறந்தோருக்கு தடையாகவோ அமைந்து விடாதீர்கள். வாழ்வியலையும் படியுங்கள். இன்று பெரும்பாலான திருமணங்கள் வரதட்சணையை மையமாக வைத்து தடைபெடுவது/தள்ளிப்போவது மிகச் சில இடங்களிலே மட்டுமே உள்ளது.

மேலே குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் இங்கு ஊற வைத்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அடித்து துவைப்போம். தொடருங்கள்... :-)