திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று ஒரு வழக்கு தமிழில் உண்டு. உண்மைதான். ஒரு திருமணம் என்பது அந்த தலைமுறையோடு முடிந்துவிடுவதல்ல... தம்பதியரின் வளர்ப்புமுறை மற்றும் உயிர் ஜீன்களின் வழியாக, இந்த பந்தமும், பாரம்பரியமும் பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுகிறது. இந்த பயிரில் பூச்சிகள் விழ ஆரம்பித்திருப்பது மிக வருத்தமான விஷயம் தான்.
பழங்காலத்தில் குழந்தை திருமணம் நடைமுறையில் இருந்தது. இது மிகத் தவறான ஒரு வழக்கம். அதில் எந்த ஐயமுமில்லை. அதற்குப் பிறகு பெரும்பாலான குடும்பங்களில் தனது மகனுக்கோ, மகளுக்கோ அரசு நிர்ணயித்த வயதிற்காக காத்திருந்து... அந்த வயது வந்தவுடன் திருமணம் நடத்தி வந்தனர்.
அனால் இன்று, பல்வேறு காரணங்களால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் மிகத் தாமதமாக நடை பெறுகிறது. இந்த காரணங்களை ஆராய்ந்து களைய முடிந்தவற்றை களைந்து புறந்தள்ளுவது அவசியம் என்பதை நாம் உணரவேண்டும். இந்த காரணங்கள் அனைத்தும் நாமே உருவாக்கிக்கொண்டு... நம் சந்ததிகளின் வாழ்விற்கு நாம் போட்ட முட்டுக்கட்டை என்றால் மிகையாகது.
திருமணங்கள் தாமதமாவதற்கான காரணங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம். பெரும்பாலான குடும்பங்களில் ஏன் தங்களின் மகனுக்கு / மகளுக்கு இன்னும் திருமணம் முடிக்கவில்லை என்று கேட்டால், அதிர்ச்சியான பல காரணங்கள் வரும். சில இடங்களில் மிகக் குறைந்த வயது இடைவெளியில் தங்கை இருப்பதால், அவளுக்கு திருமணம் முடித்த பிறகு... நாம் திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்று பொறுத்திருக்கும் அண்ணன்களும் உண்டு. இது சரியான கருத்தும் கூட.
"எம் மக இன்னும் படிக்கணுங்கிறா", "எம் மயன் நல்லா செட்டிலாயிட்டு அப்பறம் பண்ணிக்கிரேங்கிறான்", "ஜாதகப் பொருத்தம் அமையல", "பொண்ணு கிடைக்க மாட்டேங்குது", "நம்ம தகுதிக்கு பொண்ணு கிடைக்கல", "நாம எதிர் பாக்குற ஒன்னு இருந்தா, இன்னொன்னு இருக்க மாட்டேங்குது", - என்று பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போவார்கள்.
இன்னும் சில வேடிக்கையான காரணங்கள் கூட உண்டு. என் நண்பன் ஒருவன் ஜெர்மனியில் இருக்கிறான். திருமணம் செய்து அந்த பெண்ணை ஜெர்மனிக்கு அழைத்து கொண்டு செல்ல வேண்டும். அந்த பெண்ணுக்கு ஜெர்மன் தெரிந்திருந்தால் சிறப்பாக இருக்கும். அதற்காக, ஜெர்மன் தெரிந்த பெண்ணாகவோ அல்லது ஜெர்மன் மொழி படிக்க ஆர்வமுள்ள பெண்ணாகவோ வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறான். இந்த நிபந்தனையோடு, வழக்கில் உள்ள நிறம், உடல் அளவு, அழகு, ஜாதி, மத, படிப்பு, அந்தஸ்து நிபந்தனைகளும் உண்டு... இதை படிக்கும்போது உதட்டோரம் சிரிப்பு வந்தாலும், உள்ளத்தில் நொந்தவர்கள் என்னை போல் பலராக இருக்கக்கூடும்.
இதில் பெரும்பாலான காரணங்களுக்கு பெற்றோரும், நாம் சார்ந்த இந்த சமுதாயமும் தான் காரணம். நாம் செட்டில் ஆவது என்று எதை அவர்களுக்கு கர்ப்பித்திருக்கிறோம்? இந்த செட்டில் ஆவது என்பது, நாம் ஏற்கனவே கொண்டுள்ள, அர்த்தமிலாத / அர்த்தம் பல கொண்ட "சும்மா" என்ற வார்த்தையை போல் இதுவும் ஒன்றே. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய நகரத்தில் பெரிய அளவிலான வீடு வேண்டும், நிரந்தரமான வேலை வேண்டும், திருமணத்திற்கு முன்பே சொகுசு கார் வாங்க வேண்டும், வெளி நாடுகளில் பணிபுரிய வேண்டும்....என்று பல வேண்டும்கள் இந்த டும்.. டும்... டும்-மை தள்ளிப்போட்டுகொண்டே போகின்றன.
வாழ்கையில் இவற்றை பெற வேண்டும் என்ற ஆவல் இருப்பதில் தவறில்லை. ஆனால், வாழ்கையை தொலைத்துவிட்டு இவற்றை மட்டுமே தேடிகொண்டிருப்பதில் என்ன இலாபம்? இதே போல் தான் இன்னும் படிக்க வேண்டும் என்பவருக்கும்... நான் இந்த டிகிரி படித்தேன், அந்த டிகிரி படித்தேன் என்று காலம் காலமாக ஏட்டு சுரைக்காய்களாக, உலகப் பொருளாதாரம், கொயஸ் தியரி, பேயஸ் தியரி என தியரிகளை மட்டுமே படித்துவிட்டு, குழந்தை வளர்ப்பு பற்றியும், குடும்ப நலம் பற்றியும், இனிமையான தாம்பத்தியம் பற்றியும் அறியாமல் இருப்பவர்களையும் நாம் என்ன சொல்வது?
படியுங்கள்.... வேண்டாம் என்பது என் கருத்து அல்ல. எதை நோக்கி நம் வாழ்வை செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து படியுங்கள். பெற்றோருக்கு பாரமாகவோ , உடன் பிறந்தோருக்கு தடையாகவோ அமைந்து விடாதீர்கள். வாழ்வியலையும் படியுங்கள். இன்று பெரும்பாலான திருமணங்கள் வரதட்சணையை மையமாக வைத்து தடைபெடுவது/தள்ளிப்போவது மிகச் சில இடங்களிலே மட்டுமே உள்ளது.
மேலே குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் இங்கு ஊற வைத்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அடித்து துவைப்போம். தொடருங்கள்... :-)